பெங்களூர் செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலைக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ”தொடர்ந்து ஒரு வருடமாக  பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி திட்டங்கள் செயல்படுத்த வில்லை என தொடர்ந்து பேசுகிறோம். அதை இந்த அரசு செய்யப் போவதில்லை. பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம் என தி.மு.க.,  தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நேரடியாக தேர்தலில் தி.மு.க.,வுக்கு வாக்களித்தனர்.



பா.ஜ.க., ஆரம்பத்திலேயே இது நடைமுறை சாத்தியம் இல்லாதது என கூறினோம். புதிய பென்சன் திட்டம் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளது என பாஜக சொல்லியதை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சொன்னதை தான் தற்போது நிதியமைச்சரும் சட்டப்பேரவையில் சொல்லியுள்ளார்.  திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி மற்றொரு பொய் என்று சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளனர். பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா தடை செய்ய வேண்டிய இயக்கம் என ஆளுநர் மட்டுமல்ல பலதுறை சார்ந்த வல்லுநர்களும் கூறியுள்ளனர்.



குறிப்பாக கேரளா, பாலக்காடு, ஆழப்புலா என கடந்த 2 ஆண்டுகளில்  நடந்த 66 கொலைகள் சமீபத்தில் நடந்த 2 முக்கிய கொலைகள் என பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா சம்பந்தப்பட்டு உள்ளது. தமிழக கவர்னர் பேசியது அவரின் உளவுத்துறை அறிவில் பேசி உள்ளார். அவர் 35 ஆண்டுகால உளவுத்துறை அனுபவம் மிக்கவர். உள்நாட்டு பாதுகாப்பில் இருந்த ஆளுநர் அவ்வாறு பேசி உள்ளார். இதனை அரசியல் ஆக்க கூடாது. உண்மை என்னவோ அதை ஆளுநர் சொல்லியுள்ளார். கோல் இந்தியாவின் 2.2 கோடி டன் நிலக்கரி உள்ளது. தமிழகத்திற்கு நிலக்கரி கூடுதல் தேவை உள்ளதாக தி.மு.க., சொல்கின்றனர். எங்களால் அதை சமாளிக்க முடியவில்லை என கூறுகின்றனர்.



மாநில அரசு தங்கள் லோடை குறைவாக மதிப்பீடு செய்துவிட்டு மற்றும் அனல்மின் நிலையங்களில் போதிய பராமரிப்பு செய்யாததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை மறைத்துவிட்டு கோல் இந்தியா நிலக்கரி மீது பழி போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் பராமரிப்பில் தவறு செய்துள்ளனர். கோல் இந்தியாவை பொறுத்தவரை குறை இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர். TANGENDGO வில் நஷ்டம் எனக்கூறிவிட்டு அதே துறை விழாவை 3 அரை கோடி ரூபாய்க்கு விழாவை நடத்தி உள்ளனர். இதுபோன்று செய்தால் மக்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கும். எனவே கோல் இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை எனச்சொல்வது மற்றும் ஒரு பொய்.  தமிழகல் தற்போது யூ.பி.எஸ்., தேவை. இனி தமிழ்நாட்டுக்கு ஜெனரெட்டேர் தேவை. வரும் காலத்தில் ஒரு ஒரு வீட்டிலும் நாமே மின்சாரத்தை தயார் செய்யும் நிலை உள்ளது எனவும்,  ஓர் ஆண்டு கால ஆட்சியை சாதனையாக அரசு பேசிக் கொண்டுள்ளது. திமுக சாதனை செய்யவில்லை. மக்களுக்கு இது சோதனை அரசாகத்தான் உள்ளது” என தெரிவித்தார்.