பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டுகள், வணிகம், சமணம், கோட்டை, கழுமரங்கள், மாலைக்கோயில்கள், பாரம்பரியத் தாவரங்கள் என பல்வேறு பழமைத்தடயங்களைக் கொண்ட வரலாற்றுச் சுரங்கமாக கமுதி உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,




வணிக மையம்


பழங்காலம் முதல் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஒரு வணிக மையமாக இருந்துள்ளது.  வழிவிட்ட ஐயனார் கோயிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டில் ஐந்நூற்றுவர் எனும் வணிகக்குழுவின் மெய்க்கீர்த்தி உள்ளது. அக்கோயிலில் உள்ள பாண்டியர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த மற்றொரு வட்டெழுத்துக் கல்வெட்டில் இவ்வூர் திருப்பொற்புனம் என சொல்லப்பட்டுள்ளது. வழிவிட்ட ஐயனார் கோயில், பசும்பொன் ஆகிய இடங்களில் 9 - 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் உள்ளன. குண்டுகுளம், கோவிலாங்குளம், பாக்குவெட்டி, வீரமாச்சான்பட்டி  உள்ளிட்ட பல இடங்களில், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கு அமைக்கப்பட்ட மாலைக்கோயில்கள் உள்ளன. நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவை 300  முதல் 500 ஆண்டுகள் வரை பழமையானவை.


மூலிகைத் தாவரங்கள்




கமுதி பகுதியில் அரியவகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன.  பசும்பொன் அய்யனார் கோயிலில் வளர்ந்து வரும் துரட்டி ஆதண்டையின்  தாவரவியல் பெயர் கெப்பாரிஸ் டிவாரிகேட்டா (Capparis divaricata). பெரிய முள் செடி. பழங்கள் ருத்திராட்சை போல இருப்பதால் இதை ருத்திராட்ச மரம் என தவறுதலாகக் கூறுகிறார்கள்.  இதன் இலை, பழம், வேர், விதை ஆகியவை வலி, சளி, வாதம், சிறுநீர் பிரிப்பு, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சினை போன்ற நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுகின்றன. அதேபோல் கமுதி சேதுபதி வட்டக்கோட்டையின் மேல்பகுதியில் கொடுமுள் ஆதண்டை எனும் தாவரம் வளர்ந்து வருகிறது. இதன் தாவரவியல் பெயர் கெப்பாரிஸ் ஸிலானிகா (Capparis zeylanica). இதன் மரப்பட்டை காய்ச்சலுக்கும், இலைகள் வயிற்றுப்புண், தீப்புண்ணுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.


திருவுடையத்தேவர் கட்டிய வட்டக்கோட்டை




கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற திருவுடையத்தேவர், பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களின் உதவியுடன் புதிய வடிவங்களில் கமுதி, பாம்பன், செங்கமடை ஆகிய இடங்களில் மூன்று புதிய கோட்டைகளைக் கட்டினார். இதில் கமுதிக்கோட்டை வட்டவடிவில் உள்ளது. குண்டாற்றின் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது. பாறைகளை வெட்டியதால் ஏற்பட்ட பள்ளம் அகழி போல் அமைந்துள்ளது. இதில் ஏழு கொத்தளங்கள் உள்ளன. இவை வீரர்கள் நின்று காவல்புரியவும், கண்காணிக்கவும், பீரங்கி இயக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி கொண்டு தூரத்தில், அருகில் உள்ளவர்களைக் குறிபார்க்க இக்கோட்டையின் மேல் சுவர்களில் துளைகள் உள்ளன. இக்கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் உள் மற்றும் வெளிப்புறச்சுவர்களில் பலவிதமான பாறைக்கற்களைக் கொண்டு ஒட்டியுள்ளனர். 




இதனால் இக்கோட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது கற்கோட்டை போன்ற அமைப்பில் காணப்படுகிறது. கோட்டை கட்டுவதற்கான செங்கற்களை இங்கேயே  தயாரித்துள்ளனர். சிறிய கோட்டையாக இருந்தாலும் இரண்டடுக்கு வரிசையில் பாதுகாப்பு இருந்துள்ளது.  கி.பி.1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கற்கள் குண்டாறு மதகு அணையின் அருகில் சிதறிக் கிடக்கின்றன. கோட்டையில் இருந்த கற்களை பெயர்த்து எடுத்து கமுதி குண்டாற்றில் பாலம் கட்ட ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. கற்கள் பெயர்ந்து வெறும் செங்கல் கோட்டையாக இப்போது காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்பு, அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது, இதையும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதில் எஞ்சிய பகுதிகளே தற்போது நாம் காணும் இக்கோட்டை இன்னமும் காட்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.