நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்த காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரின்ஸ் பிரபுதாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “2018ஆம் ஆண்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தேன். அப்போது அரசு தரப்பில் என் மீது பதியப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரணை செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


பின் என் மீது பதியப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கை நகலை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் கேட்கும்போது நீதிமன்றத்தில் தற்போது வரை இறுதி அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவித்தனர். எனவே, நீதிமன்றத்தில் தவறுதலாக அறிக்கை அளித்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு முந்தைய விசாரணையில், நீதிமன்றத்தில் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது நீதிமன்ற பணியாளர்கள் நேரம், தேதி, முத்திரை, கையெழுத்து உடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகள் கண்காணிக்க மேலும் வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தென் மண்டல காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.


தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர் பதில் மனு தாக்கல் செய்தார். ஒப்புகை சீட்டு வழங்க உத்தரவிட்டதன் பின்பு கடந்த 2 மாதத்தில் 2011 முதல் 2021 வரை 65000 வழக்குகளில் 25000 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புகை சீட்டு பெறப்பட்டுள்ளது.  38000  வழக்குகளில் தடவியல் துறை அறிக்கை, பிறதுறைகளில் இருந்து அறிக்கை பெறப்பட வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்பை விட அதிகமான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


இதனையடுத்து நீதிபதி, தென் மண்டல காவல்துறை தலைவர், துணை காவல்துறை தலைவர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.


மேலும் இந்த வழக்கில் நிறைவேற்றப்பட்ட உத்தரவுகள் குறித்த அறிக்கையை தென் மண்ட காவல்துறை தலைவர் சமர்ப்பிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


 




மற்றொரு வழக்கு


காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

 

கரூரை சேர்ந்த சதீஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "தனியார் கழிவறைகளின் கழிவுகளை  அருள்மிகு மடுகரை செல்லாண்டி அம்மன் திருக்கோயில் அருகே, காவிரி ஆற்றில் விடுவதாகவும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி  சந்திரசேகரன் அமர்வு, "இந்த வழக்கை பொறுத்தவரை காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவறைகளை கட்ட உத்தரவிட வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பில் இரண்டு மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், இனிவரும் காலங்களிலும் காவிரி ஆற்றில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.