மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் காவல் நிலையத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காலணி வீசிய சரண்யா உட்பட 10 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் 3 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

 

இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தேடி வரும் பாஜகவினர் சஞ்சய், மணிமாலா உட்பட 18 பேர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனுதாரர்கள் 18 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி, அனைவரும் சேலத்தில் தங்கியிருந்து மறு உத்தரவு வரும் வரை சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினமும் காலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

 

 



மற்றொரு வழக்கு




குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடத்தில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரம் மற்றும் கழிப்பறைகளுக்கு உடனடியாக மின்வசதி கோரிய வழக்கில் குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிபி-1802 காலகட்டத்தில் தளவாயாக இருந்தவர் வேலுத்தம்பி. அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினார். அவரை பிடித்து கொடுப்பவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. ஆங்கிலேயேரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக கேரள மாநிலம் மண்ணடி பகவதி அம்மன் கோயிலில் தற்கொலை செய்து கொண்டார். வேலுத்தம்பி தளவாய்க்கு மண்ணடியில் நினைவிடம் உள்ளது.


தலக்குளத்தில் வேலுத்தம்பி தளவாய்க்கு 2009-ல் தமிழக அரசால் ரூ. 38.42 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நினைவிடப் பகுதியில் 2 கழிப்பறை மற்றும் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. உயர் மின்கோபுரத்திற்கான மின்கட்டணம் தலக்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் உயர் மின்கோபுரம் மற்றும் கழிப்பறைக்கான மின் வசதி திடீரென துண்டிக்கப்பட்டது.


இதனால் வேலுத்தம்பி தளவாய் நினைவிடப் பகுதி போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. சுற்றலா பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வேலுத்தம்பி தளவாய் நினைவிடத்தில் உயர் மின்கோபுரம் மற்றும் 2 கழிப்பறைகளுக்கு உடனடியாக மின்வசதி செய்து தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனுவுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், தலக்குளம் ஊராட்சி தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.