திருச்சி மலைக்கோட்டை பல்லவர் குகை கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற கோரிய வழக்கில்,

பல்லவர் குகை கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த சவுந்தராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டையில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பல்லவர் குகை கோயில் உள்ளது. இந்த குகை கோயிலை ஒட்டி கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, குகை கோயிலை ஒட்டியுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 

 

* பல்லவர் குகை கோயில் அருகே உள்ள இடம் ரோசன் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குடோன் கட்டியுள்ளார். 

 

* அதனால் குகைக் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டு, அதில் 3ம் நபர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர். 

 

* இந்த கட்டிடங்களின் வாடகை கோயிலுக்காக செலவிடப்படுகிறது. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

 

* வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் நாட்டின் கலாச்சாரம், கலை, பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும்.

 

* தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

* பல்லவர் குகை கோயில் அருகே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர், திருச்சி மண்டல மத்திய தொல்லியல் அதிகாரி ஆகியோர் 4 வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 

 

* இந்த ஆய்வில் கட்டிடத்தால் குகை கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்தால் அதை சட்டப்படி அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என உத்தரவிட்டனர்