அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தமாக தலையிட விரும்பவில்லை, பாலியல் வழக்குகளில் குற்றவாளி நிரூபணம் ஆன உடன் 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மதுரையில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.






மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் குரு தியேட்டர் அருகே உள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில்  தமிழ் மாநில காங்கிரஸ் தலையீடாது. கூட்டணியில் இருப்பதால் நான் கருத்து கூற விரும்பவில்லை. அ.தி.மு.க., தமிழகத்தில் மிக பலமான கட்சி. அதிமுக தமிழகத்தில் எதிர்கட்சிகளாக செயல்பட்டு வருகிறது.  பா.ஜ.க., மக்களுக்காக போராடி வருகிறது. அ.தி.மு.க.,வுடன் பா.ஜ.க ஒத்த கருத்துடன் செயல்பட்டு வருகிறது.



ஒவ்வொரு கட்சியும் தங்களின் பலத்தை நிரூபிக்க பணிகள் செய்து வருகிறது. அ.தி.மு.வை பா.ஜ.க பிரித்து விட்டது என்ற கருத்து தமிழகத்தின் ஆளும் கட்சி, கூட்டணி கட்சிகளின் பயத்தை காட்டுகிறது. 2024 தேர்தலை முன்னிட்டு தமிழக கட்சிகளுக்கு இருக்கும் பயத்தை ஒட்டியே இப்படியான கருத்தை பரப்புகிறார்கள். தமிழகத்தில் எதிர்கட்சியாக அ.தி.மு.க., தான் உள்ளது. இதை பா.ஜ.க., ஏற்றுக்கொள்ளும். அ.தி.மு.க.,வுடன் ஒத்த கருத்துடன் செயல்படுவது தான் பாஜக. அ.தி.மு.க - பா.ஜ.க.,வுக்குள் எந்த போட்டியும் கிடையாது. தி.மு.க., ஒராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து உள்ளனர்.



தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமால் மக்களை திசை திருப்பி வருகிறது. ஒராண்டு கடந்தும் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கவில்லை. தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கை தி.மு.க தலைமையிலான அரசு நிலை நாட்ட வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. போதை ஒழிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆன் லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும், பாலியல் வழக்குகளில் குற்றவாளி உறுதியான 24 மணி நேரத்தில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வழக்குகளுக்காக மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்" என கூறினார்.