எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் திரு. நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் நன்மாறன் எம்.எல்.ஏ குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் திரு. நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/ykTEuITf6X


— M.K.Stalin (@mkstalin) October 28, 2021







மேடை கலைவாணர் என போற்றப்பட்டவர் தான் நன்மாறன். பெயருக்கு ஏற்றது போல் நன் மாறானாக வாழ்ந்து மறைந்துள்ளார். மதுரை முன்னாள் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனான்றி இன்று மாலை 4 மணிக்கு காலமானார்.  74 வயதில் காலமான அவருக்கு பலரும் புகழ் அஞ்சலி செய்து வருகின்றனர்.



2001 மற்றும் 2006 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வென்று மதுரை கிழக்கு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு சென்றார் நன்மாறன். மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் இரு கண்ணென கொண்டவர் மக்களுக்கு பணி செய்ததற்காக அரசு கொடுத்த சம்பளத்தையும் விதிப்படி கட்சிக்கே கொடுத்தார். பின்னர், அரசு அளிக்கும் 20 ஆயிரம் ரூபாய் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, கட்சி அளிக்கும் 12 ஆயிரம் ரூபாய் சொற்ப பணத்தில் வாழ்ந்து வாழ்ந்தார். மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு காம்பவுண்டு மாடி வீட்டில் 6000 ரூபாய் வாடகைக்கு வசித்து அரசியல் கட்சியினருக்கு முன் உதாரணமாக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.



நன்மாறன் வே.நடராசன் - குஞ்சரத்தம்மாள் தம்பதியருக்கு மகனாக மதுரையில் பிறந்தவர்.  மனைவியின் பெயர் சண்முகவள்ளி இவர்களுக்கு குணசேகரன், இராசசேகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். களச்செயல்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக விளங்கும் தோழர் நன்மாறன் அவர்கள் 2001, 2006 என இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி இருக்கிறார்.

 சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். 



மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும். 1968 இல் குறிஞ்சி இதழை நடத்திவந்த நெடுமாறன் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பிரிவாக ‘ஊழியர் கலை எழுச்சி மன்றம்’ என்ற அமைப்பு இருந்தது.  இதில் எம்.ஆர்.எஸ்., மணி, புலவர் ராஜாமணி போன்றோர் இருந்தனர். அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். 1971 இல் தேர்தல் பிரச்சார மேடைகளில் முதன்முதலாக பேச ஆரம்பித்தார். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார்.



தமுஎகசவில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கொள்கை கொண்டாலும் இந்து கோயில்களில் பல்வேறு முன்னேற்றங்களை செய்துள்ளார். மதுரையின் முன்னாள் கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் அதிகமான செளராஸ்ட்ரா இன மக்கள் இருந்தனர். அவர்களது முன்னேற்றத்திற்கு பல்வேறு முயற்களையும் மேற்கொண்டுள்ளார். தனது அப்பா கோயில் பூசாரியாக இருந்த போது கோயிலில் கிடைக்கும் பொங்கலை வழியில் தானமாக கொடுத்த பண்புதான் தன்னை வாஞ்சை கொண்டவராக மாற்றியது என குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களின் அன்பை பெற்ற  நன்மாறன் அவர்களின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.