மதுரை முனிச்சாலையைச் சேர்ந்தவர் பாண்டியன் ஆட்டோ டிரைவரான இவரது முகநூல் பதிவு, கடந்தாண்டு சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தது. அதில், "மதுரை அரசு மருத்துவமனை அருகே பஸ்சில் ஏற முயன்ற ஒரு பெரியவர், தனது ஒற்றைக் கால் செருப்பைத் தவற விட்டார். உடனே கீழே இறங்கி, ஒற்றைக்கையில் ஒரு செருப்புடன் மற்றொன்றை தேடி கண்டுபிடித்தார். மகிழ்ச்சியில் இரு செருப்புகளையும் காலில் போட்டுக்கொண்டு நின்றவரை, அருகில் சென்று பார்த்து, 'எங்கே போகணும்' என்றதும், 'தம்பி... கருப்பாயூரணி போகணும். ஆனால் என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு' என்றார். ‘வாங்க ஐயா' எனச் சொல்லி அவரை ஏற்றியதும் அடையாளம் தெரிந்தது. அவர்தான் இருமுறை மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த நன்மாறன் ஐயா, அவருடன் ஒரு செல்பி எடுத்து பதிவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார். இந்த பதிவு தான் கடந்தாண்டு வைரலாகி மாறியது.



முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன், பென்சன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதியில் வாழ்க்கை நடத்திவந்தவர். கக்கன், காமராஜரை போல் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த நன் மாறன் நேற்று இரவு மூச்சு திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனான்றி இன்று மாலை 4 மணிக்கு காலமானார் அவருக்கு வயது 74 இவர் 2001 முதல் 2011 வரை இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.



எம்.எல்.ஏ நன்மாறன் குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முகநூலில் எழுதிய பதிவு ஒரு சின்ன நிகழ்வுதான். அந்த அளவிற்கு தன் வாழ்க்கை முழுதும் எளிமையாக வாழ்ந்துகாட்டினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதவி செய்வதாக கூறியபோது கூட அதனை மறுத்தார். இவரின் எளிமையை பாராட்டி தேர்தல் சமயத்தில் நன்மாறன் போட்டியிட்ட தொகுதிக்கு நேரடியாக களத்திற்கு வந்து ஜெயலலிதா அவரின் எளிமையை புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார். இப்படி அனைத்து அரசியல் கட்சியினராலும் போற்றப்பட்ட நன்மாறன் இறந்தது மதுரை மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.