கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.







மேலும், மதுரை, சிவகங்கை,  மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 1ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.  வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.



 

 

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் இன்று வைகை அணையின் முழு கொள் அளவான 71 அடியில் 70 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து காலை 11 மணியளவில் 4006 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே வைகை ஆற்றின் கரையோரமாக உள்ள 5 மாவட்ட மக்களான தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை  விடப்பட்டுள்ளது. வைகையாற்று பகுதி மக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 



மேலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கி விட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.