சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாச்சியாபுரத்தில் பூமிநாதன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு  குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.






இதை அறிந்த மர்ம நபர்கள்  வீட்டை உடைத்து 26  சவரன் தங்க நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் கொள்ளையடித்த அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் வீட்டினை தீ வைத்து கொளுத்தி சென்றனர். இதில் வீட்டின் பத்திரம், துணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

 



 

இதேபோல் அருகில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் நாச்சியப்பன் வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர்.




 

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் ”வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து கொள்ளையர் திருடி உள்ளனர். திருட்டு தொடர்பாக சிக்கிவிடுவோம் என வீட்டில் உள்ள பொருட்களையும் தீ பத்த வைத்துள்ளனர். இது குறித்து புகார் அளித்துள்ளோம் காவல்துறையினர் திருடர்களை விரைவாக பிடிக்க வேண்டும்”.