அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோயிலில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இரவில் தியானம் செய்து சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

2026 தேர்தல் களம் சூடு பிடிக்கிறது
 
2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளும் தனித்தனியாக கூட்டணிகள் அமைத்து ரேசில் முன்னே சென்று கொண்டிருக்கின்றனர். அதே போல் புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் மற்றும் நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியினர் டஃப் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இரவில் தியானம் செய்து சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
 
சர்வேஸ்வரர் கோயில் சாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்
 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ளது, சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம். இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன், பைரவர், கருப்பசாமி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகள் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
 
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் சாமி தரிசனம்
 
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று  ஆட்சி அமைக்கவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டியும் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி நேற்றிரவு 10.30 மணியளவில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். பின்பு கோயிலில்  சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.