தவறான நபர்களை கட்சியில் சேர்த்து கொண்டு அரசியல் செய்வது தான் மெச்சூரிட்டி என்று அண்ணாமலை கருதுகிறார் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.


 


இதுதொடர்பாக அவர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


இந்தியாவில் லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பதற்கு துவங்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. ரூ.3 கோடி லஞ்சம் கேட்டு கைதான அமலாக்கத்துறை அதிகாரி கைது  செய்யப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்க துறை வருமானவரித்துறை பயன்படுத்தி இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது என இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் எதிர்க்கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டு நிரூபிக்கும் வகையில் உள்ளது. பாஜக ஆளுகின்ற மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ஊழல் செய்யவில்லையா அங்கு ஏன் இது போன்ற அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெறவில்லை. தமிழக அரசு அதிகாரிகள் செய்கின்ற குற்றச்சாட்டுக்கு  தமிழக அரசை குற்றம் சாட்டுவது நல்லதா. தினமும் தமிழக அரசை குற்றம் சாட்டும் அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதை மட்டும் ஏன் சரியான பதில் கூற மறுக்கிறார் என்றார்.




மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய சென்றது தவறு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியது தொடர்பான கேள்விக்கு :-  முன்னாள் இருந்த ஆளுநர்கள் நடுநிலைமையோடு செயல்பட்டு வந்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர்கள் பாஜக, ஆர் எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத்வின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகின்றனர். பாண்டிச்சேரி ஆளுநரை பொருத்தவரை பாஜக பேச்சாளராக தான் கூறியுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எங்க வேண்டுமானாலும் சோதனை செய்ய முழு உரிமை உள்ளது.    




விலைவாசி உயர்வு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு அனைத்திற்கும் மூல காரணமே மத்திய அரசுதான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விலைவாசியில் பிஜேபிக்கு எதிராக பிரதிபலிக்கும். இந்தியா கூட்டணியில் மதிமுக தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலிடம் தெரிவிப்போம். அவர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். 


பாஜக அண்ணாமலை தலைமைக்கு வந்த பிறகு அவரது கட்சியில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் , பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் ஹிந்துக்களை பாதுகாக்கும் இயக்கம் என்றும் சொல்லும் அண்ணாமலை அவரது கட்சியில் புதிதாக கோவில் நிலத்தை அபகரிப்பு செய்தவர்கள், கோவில் சிலையை திருடியவர்கள், நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நபர்கள் இது போன்ற நிறைய நபர்கள் பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். தவறான நபர்களை கட்சியில் சேர்த்து கொண்டு அரசியல் செய்வது தான் மெச்சூரிட்டி என்று அண்ணாமலை கருதுகிறார் எனப் பேசினார்.