அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரி, தமிழகத்தில் அண்ணாமலை வெறுப்பை விதைத்து வருகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் அதிமுக நிர்வாகி டாக்டர் சரவணன் பேட்டியளித்தார்.

 

அண்ணாமலை மீது புகார்


 

அ.தி.மு.க., மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் லோகநாதனை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அ.தி.மு.க., குறித்தும், எடப்பாடி கே.பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

 


 

டாக்டர் சரவணன் செய்தியாளர் சந்திப்பு


 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் கூறுகையில்,”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையில் அண்ணாமலை பேசியுள்ளார். 51 ஆண்டுகள் கடந்து அ.தி.மு.க., ஆலமரம் போல செயல்படுகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளது. சாமானிய மக்களுக்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மட்டுமே இடம் உள்ளது. பாஜக என்பது மழை பெய்த உடன் முளைக்கும் காளான் போன்றது. அண்ணாமலை பச்சை மையில் கையெழுத்து போடுவது மட்டுமல்லாமல் பச்சை பச்சையாய் வீடியோ எடுத்தவர். பா.ஜ.க என்பது வீடியோ கட்சி, அண்ணாமலை அரசியல் வியாபாரி. அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசினார். 

 

அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும்


 

தற்போது எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை தனிநபர் விமர்சனம் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து பேசி உள்ளார். அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டன் வெகுண்டு எழுந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடு ஏற்படும். அ.தி.மு.க., தொண்டர்கள் அண்ணாமலைக்கு எதிராக ஆன்லைன் புகார்கள் அளிக்க உள்ளனர். அண்ணாமலை தரம் கெட்ட அரசியல் வியாபாரி, தமிழகத்தில் அண்ணாமலை வெறுப்பை விதைத்து வருகிறார். பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தமிழிசை, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த நல்ல அரசியல் அண்ணாமலை செய்யவில்லை, அண்ணாமலை நாக்கை அடக்க வேண்டும், இல்லையெனில் நாக்கு அழுகி விடும்" என கூறினார்