அதிமுகவைப் பற்றி பேசும் அண்ணாமலைதான் உண்மையான தற்குறி, இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் ஆட்டுக்குட்டி மேய்ப்பதற்காக அண்ணாமலை நிச்சயமாக சென்று விடுவார். அப்போது பிஜேபி நிற்கதியாக தமிழ்நாட்டில் இருக்கும்  என அதிமுக மாநில இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம் பேசினார்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குங்கும காளியம்மன் கோயில் தெருவில் உள்ள முனியப்பன் கோவில் மண்டபத்தில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 வார்டுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கு 3750 உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. 




அதன் பின்னர் பேசிய அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பரமசிவம், “இந்த நாட்டை மதவாத நாடாக மாற்றி தமிழ்நாட்டை கூறு போட்டுக் கொண்டிருக்கும் அந்த சக்தியோடு சேர்ந்து நமக்கு பதவி வேண்டும் என்றால் அப்படிப்பட்ட பதவி வேண்டாம். யார் சொன்னது பிஜேபியுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுக தான் சொன்னது. நமது தலைமையைப் பற்றி பேசும் அண்ணாமலை தான் உண்மையான தற்குறி. பேரறிஞர் அண்ணாவை தரை குறைவாக பேசிய அண்ணாமலை தான் தற்குறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொச்சையாக பேசி மீண்டும் கூட்டணி சேர வேண்டும் என கெஞ்சி கொண்டிருக்கிற அண்ணாமலை தான் தற்குறி.


அண்ணாமலை என்பவர் ஒரு அரசியல் அனுபவமற்ற, அரசியலுக்கு லாயக்கு இல்லாத தலைவர் என்பதை தனது பேச்சிலேயே நிரூபித்துள்ளார். ஒரு அடிப்படை அறிவு இல்லாதவர் பேசுவதைப் போல இன்று அண்ணாமலை பேசுகிறார். பி.ஜே.பி கட்சியினுடைய தொண்டர்களின் உழைப்பை கவலைக்கிடம் செய்து கொண்டு, தன்னை மட்டும் வளர்த்து தன் பெயர் தெரிய வேண்டும் என்று நினைப்பவர் அண்ணாமலை. அண்ணாமலை விவசாயின் மகன் தானே, உன் மோடி ஆட்சியில் இருக்கும் போது பிரதமர் மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2020-2021 கடைசி ஆண்டில் ஒரு விவசாயிக்கு கூட பணம் வழங்கவில்லை. பட்ஜெட் இல்லை என்று. ஆனால் அந்த ஆண்டிற்கான அத்தனை பயிர் காப்பீடு திட்டத்தையும் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டது.




தமிழ்நாட்டின் மீனவர்கள் அனைவரையும் சுட்டு வீழ்த்துகிறார்கள், கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை சரியான ஆண்மகன் என்றால் கச்சத்தீவை மீட்பதற்கு எங்களிடம் திட்டம் உள்ளது என்றும், பாரத பிரதமர் மோடி இன்னும் நான்கு ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்பார் என்று அண்ணாமலை சொல்லட்டும். அவர் சொல்வதெல்லாம் கேட்டு அண்ணாமலையை முதலமைச்சராக ஆக்குகிறோம். அரசியல் செய்வதற்காக மட்டுமே அண்ணாமலை வந்துள்ளார். தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர் வரவில்லை. முன்னாள் அமைச்சருக்கு எப்படி மரியாதை கொடுப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை.


பத்து ஆண்டு பச்ச இங்கில் கையெழுத்து போடும்போது நான் கன்னடிகா கன்னடிகா என்று கூறிய வீடியோக்கள் இங்கதான் இருக்கிறது. இன்று நீ தற்குறி என்று கூறிய எடப்பாடி பழனிசாமி தான் அரவக்குறிச்சியில் உனக்கு வாக்கு சேகரிக்கும் போது பின்னாடி கைகட்டி நின்று கொண்டிருந்தார். மோடி பெயரை அரவக்குறிச்சியில் அழித்தது அண்ணாமலை தான். அண்ணாமலை என்பவர் சுய விளம்பரத்துக்காக அரசியலில் இருப்பவர். இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் ஆட்டுக்குட்டி மேய்ப்பதற்காக நிச்சயமாக சென்று விடுவார். அப்போது பிஜேபி நிற்கதியாக தமிழ்நாட்டில் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசினார்.