தேனி மாவட்டம் ஆண்டிபட்டி -  வைகை அணை சாலை பிரிவில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பத்திரிகையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் நான் பேசுவது ஒரு வார்த்தை தவறாக இருந்தால் என்னை கேள்வி கேட்கலாம் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது 


முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர் உற்சாகமிகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டி பேசுங்கள் என்று உரக்க கூறினார். அதற்கு பதில் கூறிய திண்டுக்கல் சீனிவாசன் அவரை திட்டுவதற்காகவா இந்த கூட்டத்தை போட்டோம் . இதுவரை யாரும் கூறாத விஷயங்களை பேச நான் வந்திருக்கிறேன் என்றார். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர்  பழையவற்றவை பேசி பேசி தவிச்சு போச்சு என்றார்.  இதனால் கோபமான திண்டுக்கல் சீனிவாசன் தவிச்சுப்போச்சு என  கூறுபவர்கள் பிடித்தால் இருங்கள் இல்லையென்றால் கூட்டத்தை விட்டு வெளியே போங்கள் என்றும்,  ரீல் விட்டுக்கொண்டு கலகம் செய்யும் வேலையை இங்கு செய்யக்கூடாது என்றும் எதற்கும் நாங்கள் தயார் என்றும் பேசினார்.



பின்னர் சபையில் நடந்ததை நான் கூறுகிறேன் தமிழ்நாட்டில் இதுவரை இதை  யாரும் கூறவில்லை புரிந்து கொள்ளுங்கள் என்றார். மக்களிடம் உண்மையை பேசிக்கொண்டு இருக்கிறேன் என்றும் பேசியபோது கூட்டத்தில் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்த சிலரை சமாதானப்படுத்துவதற்காக மேடையில் இருந்த நிர்வாகிகள்  சென்றனர். அதை தடுத்த திண்டுக்கல் சீனிவாசன் உட்காருங்கப்பா ஆள் ஆளுக்கு எந்திரிச்சு செல்லாதீர்கள் என்னை பேச விடுங்கள் என்றார் . 



மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேச துவங்கியதும் அதிமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியால் கூச்சல்களை எழுப்பினார்கள். இதனால் கோபம் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன் அமைதியாக இருங்கள் நான் என்னத்த பேசுவது என்றார் . மேலும் கசகச என பேசிக்கொண்டு இருந்தால் எவ்வாறு பேசுவது தள்ளி நில்லுங்கள் ஒருமுறை ஒருவர் அடித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறிய திண்டுக்கல் சீனிவாசன் அருகில் இருந்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறும் ஒலி கேட்டவுடன் பேச்சை நிறுத்திவிட்டு தொழுகை முடியும்வரை  மேடையில் சிறிது நேரம் அமர்ந்து விட்டார்.



பின்னர் மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, அதிமுக தொண்டர்கள் உற்சாக மிகுதியால்  திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கு பேச்சு எதிர்பேச்சு பேசிக்கொண்டு கூச்சல் எழுப்பிக்கொண்டு  இருந்தார்கள் . இதையடுத்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்த மேடையில் இருந்த நிர்வாகிகள் கீழே இறங்கி வந்து கூச்சலிட்டவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் கூச்சல் குழப்பம் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதமிட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் அதிகமாகி  பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேசிய  திண்டுக்கல் சீனிவாசன் அமைதியாக இருங்கள். யாரும் யாருக்கும் பஞ்சாயத்து பண்ணாதீர்கள் என்று கூறினார்.