நாய் கடித்ததால் வெளிநாட்டு வேலைக்கு செல்லவிருந்த நபரின் பயணம் ரத்தான விசயம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

 

வெளிநாட்டில் வேலை


 

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் ஒட்டிய பகுதிகளில் பெரியளவு வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அதிகளவு வெளிநாட்டு வேலையை நம்பியுள்ளனர். இந்த சூழலில் குடும்ப சூழல் காரணமாக வெளிநாடு செல்லவிருந்த நபரை வீட்டு வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததால் அவருடைய பயணமே ரத்தாகியுள்ளது, என வேதனை தெரிவித்துள்ளார்.

 


காவல் நிலையத்தில் புகார் 



மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த  கீழவளவு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்த்து வரும் நிலையில் ஒரு நாய் சாதுவாகவும் மற்றொரு நாய் பயங்கர கோபம் கொண்ட நாயாகவும் இருந்துள்ளது. இந்த சூழலில் கோபமுடைய நாயானது கீழவளவு கிராமத்தில் பெண் உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து வந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கீழவளவு கிராமத்தை சேர்ந்த கேசவன் என்பவரை கருப்பையாவின் நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக கேசவனுக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கேசவன் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் கேசவனுக்கு நாய் கடித்து தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என கூறி அவரது பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நபர்களை கடித்து காயப்படுத்தி உள்ள இந்த நாயை ஊராட்சி நிர்வாகம் பாதுகாப்போடு அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கேசவன் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை


 


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கருப்பையாவின் நாய் பலரையும் கடித்துள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை. தற்போது ஒருவர் வெளிநாடு செல்லும் பயணமே ரத்தாகியுள்ளது. தொடர்ந்து இந்த நாய் பொதுமக்களை கடித்தால் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம். எனவே காவல்துறையும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.