தமிழகத்தில் சமீபகாலமாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், கல்வெட்டுகள், சிலைகள் ஆகியவை அதிக கவனம் பெற்று வருகின்றன. தொல்லியல் துறை மட்டுமின்றி வராலாற்று துறைசார்ந்த ஆய்வாளர்களும் தமது சொந்த முயற்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 



 

தமிழக அரசை பொறுத்தவரையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2000 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் குறித்த தொல்லியல் ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், 3700 ஆண்டுகளுக்கு அதிகமான பொருநை நதி நாகரீகம் தொடர்பாக நெல்லையில் 15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 



 

கீழடி அகழாய்வை பொறுத்தவரை  கி.மு 4 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த வெள்ளிக்காசு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அகழாய்வு நடைபெறும் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொற்கை துறைமுகம் கிமு 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பொருநை ஆற்றங்கரையில் நாகரீகம் 3700 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அகழாய்வு பணிகளுக்கு ரூபாய் 5 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். இவ்வாறு தொல்லியல் தொடர்பான கருத்துக்கள் மேல் ஓங்கி வருகிறது. 



 

இந்த நிலையில்  புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே, கலைக்குடிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் 700 ஆண்டுகள் பழமையான வயக்கல் கல்வெட்டு கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்களான, முருகபிரசாத்,  நாராயணமூர்த்தி, ஜான்சன், ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது, குளத்தூர் தாலுகா, கலைக்குடிபட்டி கண்மாயின் பாசனத்தில் உள்ள ராமசாமி  என்பவருடைய விவசாய நிலத்தில், கல்வெட்டு  ஒன்று இருப்பது கள ஆய்வில் தெரியவந்தது.  இந்த கல்வெட்டில், ஐந்து வரிகளில் கல்வெட்டானது எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல் மற்றும் நடுப்பகுதி மிகவும் அழிந்த நிலையில் காணப்படுகிறது. கல்வெட்டின் இறுதியில், மாரி  வயக்கல் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இடையில் மனைவி என்று பொருள்படும் கிழத்தி என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது. ஆகவே, அவ்வூரை சேர்ந்த, ஒருவரின் மனைவிக்கு சொந்தமான வயல் என்பதனை குறிக்கும் வண்ணம் இந்த கல்வெட்டு எழுதப் பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

 

இது போன்ற வயக்கல் கல்வெட்டு ஒன்று திருமயம் தாலுகா கண்ணணூரில் தொல்லியல் ஆய்வாளர் கரு.இராசேந்திரன் அவர்களால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்வெட்டின் எழுத்து அமைதியை கொண்டு இது 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்ததாக இருக்கலாம்” என தெரிவித்தனர்.

 


மேலும் கீழடி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட ஆட்சியர் தகவல் !