மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடியில் பொது மக்களின் தகவலை தொடர்ந்து தொல்லியல் ஆய்வு செய்துள்ளனர்.  தொல்லியல் ஆர்வலர்கள் முனீஸ்வரன், இலட்சுமண மூர்த்தி,  ஆதி பெருமாள் சாமி மற்றும் மாணவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு கள ஆய்வு  செய்தபோது ஆலமரத்து விநாயகர் கோவில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இக்கல்வெட்டினைப் படி எடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரியவந்தது.



 

இது குறித்து உதவிப் பேராசிரியர்   முனீஸ்வரன்,  இலட்சுமண மூர்த்தியிடம் கேட்டபோது,  வேளாண்மை மண்பாண்டம் தொழில் சிறப்பு பெற்ற பெருங்குடியில்   பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது. அவை மண்ணில் பாதி புதைந்த நிலையில் 5 அடி நீளம் கொண்டகல் தூணில் எட்டுக் கோணம் , இரண்டு பட்டை வடிவத்திலும் செதுக்கப்பட்டுள்ளது. 

 

கோட்டு ஓவியம்: தூணின் மேல் பகுதி பட்டையில் 3 பக்கம் நில அளவை குறியீடுகள், மற்றொரு பக்கம் திருமாலின் வாமன அவதாரத்தின் குறியீடும் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. கோட்டோவியம் நிலத்தை வைணவ கோவிலுக்கு நிலக்கொடையாகக் கொடையாக கொடுத்ததைச் சுட்டிக்காட்டுகிறது.
  



 

கல்வெட்டு 

 

பொதுவாக ஒரு முழுமையான கல்வெட்டு ‘மங்கலச் சொல், மெய்க்கீர்த்தி, அரசன் பெயர், ஆண்டுக் குறிப்பு, கொடை கொடுத்தவர், கொடைச் செய்தி, சாட்சி, காப்புச் சொல், எழுதியவா் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கொடையானது நிலமாக இருப்பின் அதன் நான்கு எல்லைகள், பொன் என்றால் அதன் அளவு ஆகியவை இடம்பெறும் . இப்பகுதியில் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டு கல்தூணின் கீழ்பட்டை பகுதியில் 12 வரிகள் இடம் பெற்றிருந்தன. இக்கல்வெட்டை மைப்படி எடுத்து ஆய்வு செய்தபோது  எழுத்தமைதியின் வடிவத்தை வைத்து கி.பி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் தெரிய வந்தது. பல எழுத்துகள் தேய்மானம் ஏற்பட்டதால் முழுப் பொருளை அறிய முடியவில்லை. தமிழ்நாட்டில் தொல்லியல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டது. இக்கல்வெட்டு நிலதானம் வழங்கிய செய்தியும் ஆவணமாக எழுதி கொடுத்தவரின் பெயர், அதன் நிலத்தின் நான்கு எல்லைப் பகுதியை குறிப்பிட்டுள்ளது. விக்கிரம பாண்டியன் பேரரையான் என்ற சிற்றரசன் இப்பகுதியை ஆட்சி செய்ததாகவும் அவரின் ஆட்சியில்  நிலதானம் வழங்கியவரையும்  ஆவணமாக எழுதி கொடுத்த குமராஜன் என்பவரின் பெயரும் கல்வெட்டு இறுதி வரியில் இருப்பதை அறிய முடிகிறது.   என்றார் .