திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டையை சேர்ந்தவர் விஷ்ணு பிரகாஷ் (வயது 22). அவருடைய மனைவி சுமித்ரா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. விஷ்ணு பிரகாஷ் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர் வேலைக்கு சென்றுள்ளார். நூற்பாலையில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இயந்திரத்தில் விஷ்ணு பிரகாஷ் கை சிக்கியது. இதில் அவர் வலி தாங்காமல் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து சக தொழிலாளர்கள் அங்கு ஓடி வந்தனர். உடனடியாக நூற்பாலை இயந்திரம் நிறுத்தப்பட்டது.
ஆனால் எந்திரத்தில் கை சிக்கியதில் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறி, சம்பவ இடத்திலேயே விஷ்ணு பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விஷ்ணு பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விஷ்ணு பிரகாஷின் உறவினர்கள் ஏராளமானோர் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மேலும் அவர்கள் விஷ்ணு பிரகாஷின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த நூற்பாலை நிர்வாகத்தினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, விஷ்ணு பிரகாஷ் உடலை உறவினர்கள் பெற்று கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்