பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரூபாய் இரண்டு கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவியதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொதுமக்களை பாதுகாக்க சுற்றுலா தலங்கள், வணிக தலங்கள் உட்பட அனைத்து ஆன்மீக ஸ்தலங்களும் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 வருடங்களாக மூடப்பட்ட கோவில்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளது.



தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.  தங்கத்தேர், ரோப்கார் போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 



கடந்த மாதம் 23ஆம் தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதை தொடர்ந்து 24 நாட்களுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், தான்தோன்றிமலை கோவில் உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 




காணிக்கை பொருட்கள் நேற்று நடந்த உண்டியல் காணிக்கை மூலம் 1 கோடியே 64 லட்சத்து 3 ஆயிரத்து 130 ரூபாய் வருவாயாக கிடைத்தது. அதோடு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 84 செலுத்தப்பட்டிருந்தது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், கொடி மரம் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 945 கிராம், வெள்ளி 33 1/4 கிலோ (33,367 கிராம்) இருந்தது.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*


 


'இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!


 


திண்டுக்கல்: அடிப்படை வசதியும் இல்லை.. தங்குவதற்கு இடமும் இல்லை.. தவிக்கும் பழங்குடியினர்.!