பிரபலமான சுற்றுலா தலம்:


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.



அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை:


பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு  அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தநிலையில் தற்போது கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் கேரளா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கடும் பனி மூட்டத்தால் மலை சாலைகள் மறைந்துள்ளது.  ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.



தொடர் விடுமுறை:


தற்போது புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் மற்றும் வார விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் முகப்பு பகுதியான  பெருமாள்மலையிலிருந்து - வெள்ளி நீர்வீழ்ச்சி வரை நெடுஞ்சாலை துறையினரால் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு படை எடுக்க துவங்கி உள்ள சுற்றுலா பயணிகள் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது .மேலும் பணிகள் துரிதப்படுத்தாததால் சுற்றுலா பயணிகள் காத்திருக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.




ஊர்ந்து செல்லும் வாகனங்கள்:


தொடர்ந்து வாகனங்கள் வருகையால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி நடந்து வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு இருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தொடர் விடுமுறை இருப்பதால் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் இருக்கும் என்று தெரிகிறது இதனால் நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளக்கூடிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது தொடர்ந்து கோடை விடுமுறையும் துவங்க உள்ளதால் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது