90’ஸ் கிட்ஸ் ஸ்கூல்ல படிக்கும் போது ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் மட்டுமில்ல சாக்பீஸ் இல்லாட்டியும் வகுப்பறையில பாடமே நடத்த முடியாது. இந்த சாக்பீஸ் இல்லாம போர்டுல எழுதவும் முடியாது. வாத்தியார் வர்றதுக்கு முன்னாடியே சாக்பீஸ எடுத்து ஒளிச்சு வச்ச நினைவுகளும் நிறைய பேருக்கு இப்பக் கூட கண்ணு முன்னாடி வந்துபோகும். தற்போது பல்வேறு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்தாலும் சாக்பீஸை கொண்டு பாடம் நடத்துற வழக்கம் இன்னும் பெருசா கொறஞ்சபாடில்ல.




அதிலும் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது யாராவது ஒருவரை எழுப்பி அந்த பாடம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாத மாணவர் மேல வாத்தியார் கோபப்பட்டு கையில் இருக்கும் சாக்பீஸதான் முதல்ல தூக்கி எரிவாரு, அப்படி சாக்பீஸ் பலரது வாழ்க்கையில ஒரு முக்கிய இடத்த பிடிச்சுருக்கும். இந்த சாக்பிஸ்சால, பாடம் நடத்தப் பட்டு எண்ணிலடங்காத மாணவர்களையும், இதிலிருந்து நல்ல தலைவர்களையும் கூட உருவாக்கியிருக்குன்னு சொல்லலாம்.




இப்படி இந்த சாக்பீஸ்சால உருவாக்கப்பட்டவர்கள் நிறையபேர். ஆனா இந்த சாக்பீஸ்சோட பயன்பாடு பள்ளிக் கல்லூரிகளில் நாளுக்கு நாள் குறைந்துதான் வருது. திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகதிகள் முகாமில் சாக்பீஸ் தயாரிக்கும் பணியை குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். ஒரு குடும்பத்திற்கு பத்துக்கும் மேற்பட்டோர் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இவர்கள் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான சாக்பீஸ்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் குடியிருப்பவர்கள் நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மூன்று வகையான அட்டைப் பெட்டிகளில் 100, 120, 140 என்ற எண்ணிக்கை கொண்ட சாக்பீஸ் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றனர். இதன் விலை 15 முதல் 19 ரூபாய் வரை விற்கப்படுகிறது.




36 பாக்ஸ் அடங்கிய பெட்டியின் விலை 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாக்பீஸ் கொள்முதல் செய்வதில் அரசு தரப்பில் எந்த விதமான உத்தரவாதமும் கிடையாது. தலைமை ஆசிரியர்களே நேரடி கொள்முதல் செய்வதால் முறையான நிலையான ஆர்டர் கிடைப்பதில்லை. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டனூத்து அகதிகள் முகாம், மேற்கு மரியநாதபுரம், மேட்டூர், சிலுவத்தூர் ரோடு, மாவட்ட ஆட்சியர் வளாகம், மற்றும் கொட்டப்பட்டி  ஆகிய ஊர்களில் சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி தற்போது சாக்பீஸ் தயாரிக்கும் பணியில் இங்குள்ள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.