திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த முகமது அலி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் 85 ஆண்டுகள் பழமையானது. இந்தப் பள்ளிவாசலுக்கு சொந்தமாக மயானம் உள்ளது. இந்த மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டியபோது 4 அடியில் தண்ணீர் வெளிப்பட்டது.

 

இதனால் அடக்கம் செய்தவர்களின் உடல் நீண்ட நாள் மக்காமல், துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் மயான பகுதியின் உயரத்தை அதிகப்படுத்த பழனி நகராட்சியில் அனுமதி பெற்று வாடகை லாரிகள் மூலம் மணல் எடுத்து வந்து மயானத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேலைகள் தொடங்கியபோது அப்பகுதியை சேர்ந்த இந்துமுன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்த சிலர்  சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பிரச்சனை செய்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள முஸ்லிம் தர்ம பரிபாலன பள்ளிவாசலிலுள்ள மயான வேலைகள் செய்ய உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி பாஜக சார்பில் இடையிட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில், பழனி நகராட்சியில் அனுமதி பெற்றே மயான வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. பாஜக சார்பில், மயானம் கட்டுவதாக கூறப்படும் இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது எனவும், பழனி நகராட்சிக்கு அனுமதி வழங்க அதிகாரம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் வருவாய் துறையினரை சேர்க்கவும், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்