திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னமநாயக்கன்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில் அர்ஜுன் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை திண்டுக்கல் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் தனது மனைவி பெயரில் அனுமதி வாங்கி நடத்தி வருகிறார். இந்த கடையில் தினசரி பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகை காலங்களில் சிறப்பு விற்பனை நடத்தும் பிரபல பட்டாசு கடை இது ஆகும் . இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு கடையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் .




அப்போது மதியம் ஏறத்தாள 2.30 மணி அளவில் திடீரென பட்டாசு கடையில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. பட்டாசுகள் வெடிக்க தொடங்கியதும் கடைக்குள் இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் தப்பி ஓடி விட்டனர். பட்டாசு கடையில் இருந்த வானவேடிக்கை வெடிகள் ,மத்தாப்புகள், வண்ண வானவேடிக்கை, அணு குண்டுகள் வெடித்து சிதறியது. பட்டாசு சத்தம் கேட்டு  அருகில் குடியிருப்புக்களில் வசித்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் விசாகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை முடுக்கிவிட்டனர். ஏறத்தாழ 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் பட்டாசு கடைகள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.




அப்போது பட்டாசு கடை வாசலில் முழுவதும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் அந்தக் கடையில் டிரைவராக பணி செய்துவரும் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. பட்டாசு வெடித்த உடன் சுதாரித்துக்கொண்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் தப்பி ஓடிய நிலையில் டிரைவர் ராஜேஷ் தப்பி ஓடும்போது பட்டாசு வெடிப்பில் சிக்கி மாட்டிக்கொண்டார். மேலும் இந்த விபத்தில் கடையில் பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்ட உயிரிழந்த ராஜேஷ் இயக்கி வந்த ஆம்னி கார் மற்றும் கடைக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலானது. பட்டாசு கடை விபத்து குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த பட்டாசு கடையை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விற்பனைக்கு தடை செய்து பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு மீண்டும் பட்டாசு கடை செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் குடியிருப்பு உள்ள பகுதியில் இது போன்ற பட்டாசு கடைகளில் நடத்த கூடாது என்பது விதிமுறை இருந்தும் தொடர்ந்து பட்டாசுக்கடை செயல்பட அனுமதித்தது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண