”அனைத்து மாணவர்களையும் ஒரே மாதிரியாக கையாள்வதை விட, ஒவ்வொரு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் செயல்படவேண்டும்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


மதுரை நாகமலைப் புதுக்கோட்டை, பில்லர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான  நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.











மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் "பள்ளிக் கல்வித்துறையில் அனைவரும் கூட்டாக செயல்பட்டால் தான் இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லமுடியும். அமைச்சராக ஆண்டை கடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசையில்லை, சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதற்கு பள்ளிக் கல்வித்துறையை சார்ந்த அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும். கல்வி, சுகாதாரம் இரு கண்களாக நினைத்து தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அதற்கு ஏற்றார் போல் அதிகாரிகள் துறையின் முக்கியதுவம் கருதி செயல்படவேண்டும்.



தற்போதைய டிஜிட்டல் உலகில் மாணவர்களை கையாள்வது சிரமமான ஒன்று தான். அனைத்து மாணவர்களையும் ஒரே மாதிரியாக கையால்வதை விட, ஒவ்வொரு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் செயல்படவேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழிகாட்டியாக, நண்பர்களாக, தாயாக இப்படி பல்வேறு பரிமாற்றத்துடன் வழிநடத்தவேண்டும். அப்போது தான் நம்மை தேடிவரும் தகரங்களைக் கூட தங்கமாக மாற்ற முடியும். அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அதிகளவு அரசுப் பள்ளியை தேடிவர சாத்தியப்படுத்த வேண்டும். அதற்கு முன்னெடுப்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

 

 

பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

 


தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு நிலைப்பாடு ?

 

 தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்பதால் மாநில கல்விக்கொள்கை பாடத்திட்டங்களை முன்னெடுக்கப் படுகிறது. தற்போது பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை ஆய்வு செய்து அதனை தமிழ்நாடு முதல்வர் தேர்வு செய்து செயல்படுத்துவார்.

 



10-ம்  வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின் அதிகளவு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் !

 

தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி  தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் மாறுதலாக இருந்தாலும் ஜூன் மாதமே மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறமுடியும் எனவும் தெரிவித்திருந்தோம். அதே போல் இதனை தேர்வில் தோல்வி என கருதப்படக்கூடாது. அடுத்தகட்ட முயற்சி எடுக்க வேண்டும் என மாணவர்கள் எண்ணவேண்டும். மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு,  இலவச தொடர்பு எண்களையும் வழங்கி இருந்தோம். ஆனாலும் இப்படியான வருத்தமான சம்பவங்கள் நடைபெற்று விடுகிறது. எனவே பெற்றோர்கள் பிற மாணவர்களோடு ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும் அதனை வெளிக்கொண்டு வரும் விதமாக செயல்படவேண்டும்.

 

அரசுப் பாடப் புத்தகங்களை தனியாக, விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறது.

 

யாரும், அவ்வாறு புத்தகங்களை கொடுக்க கூடாது. அவ்வாறு தவறுகள் நடந்தால் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்கு கிடைக்கும் 10 விதமான பொருட்கள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. அவையும் இலவசமாக தான் செல்லவேண்டும். அதை யாரும் விற்பனை செய்யவேண்டும் என நினைக்க வேண்டாம். தவறுகள் நடைபெற்றாள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 



கிராம பள்ளி கட்டிடங்கள் அதிகளவு இடிந்து விழுகிறதே..,! அதற்கான நடவடிக்கை?

 

அவ்வாறு நடைபெற்ற இடங்களில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களுக்குள் வைத்து மாணவர்களை படிக்க வைக்க கூடாது என்று ஏற்கனவே பலமுறை அறிவுருத்தப்பட்டுள்ளது. கடந்த முறையே 10ஆயிரத்தி 31 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட உள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து இது போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்” என்றார்.