ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவுடியான அசோக்குமார் மீது கொலை கொள்ளை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குமரய்யா கோயில் பகுதியில் பால் வியாபாரம் செய்து வரும் சந்துரு என்பவரை கடைக்குள் புகுந்து வெட்டி கொலை செய்யும் முயன்ற வழக்கில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் ஜாமினில் வெளியே வந்துள்ளார். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ரவுடி அசோக்குமார் ராமநாதபுரம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் தினமும் ஜாமின் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜாமீன் கையெழுத்திடுவதற்காக ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், ஆர்.எஸ் மடையைச் சேர்ந்த ரவுடியான குமார் என்கிற கொக்கி குமார் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதி அமரும் விசாரணை வளாகத்திற்குள் வைத்து அசோக்குமாரை வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி உள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் நீதிபதி இருக்கைக்கு முன்பு கிடந்த அசோக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



 

 

 கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் மொத்த நீதிமன்ற வளாகத்தையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரை சம்பவம் நடந்த ஜே.எம் 2 நீதிமன்றத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடி கொக்கிகுமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பகுதியில் தப்பி ஓடிய கொக்கி குமாரை ராமநாதபுரம் கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளார்.



 

”சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கொக்கி குமாரின் செல்போன் சிக்னலை பின் தொடர்ந்து விரட்டி சென்றோம். அப்போது செல்போன் சிக்னல் கீழக்கரையுடன் நின்றது. அங்குள்ள புதரில் செல்போன் போட்டு சென்றுள்ளது தெரியவந்து அதனை மீட்டுள்ளோம். போலீசார் பின் தொடர்ந்து வருவதை தெரிந்துகொண்டு செல்போனை கொக்கி குமார் வீசி சென்றுள்ளான். கிழக்கு கடற்கரை சாலை வழியாக தப்பி சென்ற தகவல் கிடைத்துள்ளது.



எனவே அவன் தூத்துக்குடியை நோக்கி சென்றிக்க வாய்ப்புள்ளது. அதனால் தூத்துக்குடி போலீசாருக்கு கொக்கி குமாரின் புகைப்படத்தை அனுப்பி அலார்ட் செய்துள்ளதோம். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி பகுதியில் கொக்கி குமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற கொக்கி குமாரை முழங்காலுக்கு கீழே சுட்டு ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் பிடித்துள்ளனர்” என காவல்துறை வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

 

நீதிமன்ற விசாரணை வளாகத்திற்கு உள்ளேயே புகுந்து ஜாமின் கையெழுத்திட வந்த ரவுடியை மற்றொரு ரவுடி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.