தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜகவினரும் கூட்டமாக கூட்டமாக இருந்தார்கள். அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜகவினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்பு அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது, அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்து அமைச்சர் காரின் மீது காலணியை பாஜகவினர் எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் காவல்துறையால் 7 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.






இதில் ஏற்கனவே பாஜக முன்னாள் மண்டல தலைவர் உட்பட 7 பேரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மேலும் 25பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து மொத்தம் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று நள்ளிரவில் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கருமாத்தூர் அருகே வாகைகுளம் பகுதியில் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, மாவட்ட மகளிர் செயலாளர் சரண்யா மற்றும் தெய்வானை உள்பட 3 பேரை கைது செய்தனர்.  இதனையடுத்து 3பேருக்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட 6ஆவது நீதிமன்ற நீதிபதி சந்தானம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.








 

இதனையடுத்து 3 பேருக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பாஜக மகளிரணியினர் 3பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3 பேருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதில் முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் நிபந்தனை ஜாமில் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.