நாகர்கோவில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் எடுக்க வேண்டிய முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது மதுரைக்கிளை.







நாகர்கோவிலை சேர்ந்த அந்தோணி முத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பல முறை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வப்போது சாலையைக் கடக்க முயலும் போது ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. ஆகவே, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில் பாதையின் குறுக்கே பேயன்குழி கிராமத்தில் இருந்து நுள்ளிவிளை கிராம ஊராட்சி சாலையை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, "ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகத்தினரே முடிவெடுக்க வேண்டும்.  அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







 

 



மற்றொரு வழக்கு







ரூ. 2 லட்சம் பணம் தராததால் மண்டபம் உள்ள பகுதியில் குப்பைகளை சேகரிக்காமல் பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீறி மாப்பிள்ளையூரணி ஊராட்சித்தலைவர் செயல்பட்டு வருகிறார் என்றும் அவரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


 

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த பிரான்சிஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, எங்கள் கிராமம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியை சார்ந்தது. எங்கள் நிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு திருமண மண்டபம் மற்றும் கடைகள் கட்டினோம். இதற்காக அப்போதைய ஊராட்சித்தலைவரிடம் உரிய விதிகளின்படி முறையான கட்டிட வரைபட அனுமதி பெற்றிருந்தோம். தற்போது வரை உரிய வரியை செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் சமீபத்தில் எங்கள் திருமண மண்டபத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி, வரி வசூலிக்க ஊராட்சித்தலைவர் மறுக்கிறார். வரி வசூலிக்க வேண்டுமென்றால் ரூ.2 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

அதற்கு நான், 2002ம் ஆண்டிலேயே கட்டிட அனுமதி பெற்றுவிட்டோம் என்றதற்கு, அந்த அனுமதியெல்லாம் இப்போது செல்லாது என்றார். மேலும், நான் கேட்ட தொகையை கொடுக்கவில்லையென்றால் மண்டபத்தை நடத்த முடியாது என்று கூறி மிரட்டினார். இதன்பிறகும், எங்கள் மண்டபம் உள்ள பகுதியில் குப்பைகளை சேகரிக்கக்கூடாது என துப்புரவு தொழிலாளர்களிடமும் உத்தரவிட்டுள்ளார். 

 

இதனால் எங்கள் பகுதி முழுவதும் குப்பைகளை சேகரிப்பதில்லை. பஞ்சாயத்துராஜ் சட்டத்தை மீறி மாப்பிள்ளையூரணி ஊராட்சித்தலைவர் செயல்பட்டு வருகிறார். அவர் தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்துகிறார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து விசாரித்து, ஊராட்சித்தலைவரை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.