தூய்மை பணியாளர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற அரசின் அறிவிப்பானை எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரும், துப்புரவு தொழில் செய்வோர் மற்றும் ஆதிதிராவிடர் சங்கத்தின் தலைவருமான மலைச்சாமி, மதுரை தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

 

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5.7.2011 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்த கூடாது, சாதி ரீதியாக பாகுபாடு காட்டக் கூடாது, மின்சாரம் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்று பேரூராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

 

ஆனால் இந்த சுற்றறிக்கைக்கு புறம்பாக சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகளிலும், 3 நகராட்சிகளிலும் பணியாற்றும் ஆண் பெண் என இருபாலர் துப்புரவு தொழிலாளர்களை  டிராக்டர் ஓட்டுவது, தட்டச்சு பணிகளில் அமர்த்துவது, மின் மோட்டார்களை பார்க்க கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

 

இதனால் அவர்கள் பல்வேறு பணி சுமைகளுக்கு ஆளாகி மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளனர். எனவே 2011 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி துப்புரவு பணியாளர்களை மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்த கூடாது என்றும் மாற்றுப் பணிகளில் ஈடுபடுவர்களை மீண்டும் துப்புரவு பணிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

 

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

 



மற்றொரு வழக்கு

 















8வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மதுரையில் NIPER அமைக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2011ஆம் ஆண்டு, ஜனவரி 20ஆம் தேதி எட்டாவது நிதி ஆணையம் மதுரையில் NIPER அமைப்பதற்காக பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு மதுரையில் 116 ஏக்கர் நிலத்தினை இலவசமாக ஒதுக்கியது. ஆனால் இதுவரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை. 

 

கடந்த 2021 ஆகஸ்ட் 10ஆம் தேதி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் விவாதத்தின் போது, மதுரையில் NIPER அமைப்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். பரிந்துரை செய்யப்பட்டு, தமிழக அரசு அதற்கென நிலம் ஒதுக்கி 12 ஆண்டுகள் ஆன பின்னரும், NIPER மதுரையில் தொடங்குவது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் மருந்து கல்வி

பிரிவில் பயில விரும்பும் மாணவர்களும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இது குறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே எட்டாவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி மதுரையில் NIPER அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.