மதுரை மாவட்டம், சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் "தமிழ்நாட்டில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலைகளில் மட்டும் சமூக சேவகர் பதவியில் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறைச்சாலையில் சமூக சேவகர் பதவி காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் வேறு சிறைச்சாலைகளில் சமூக சேவகர் பதவி உருவாக்கப்படவில்லை. சிறைச்சாலைகளில் சமூக சேவகர் பதவி உள்ள நபர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. சமூக சேவர் பதவியில் உள்ளவர்களுக்கு சரியான ஊக்கம் அளிக்கப்படுவது இல்லை.

 

தமிழ்நாட்டில் சிறை மற்றும் சீர்திருத்த சேவை துறையின் கீழ் உள்ள 142 சிறைச்சாலைகளில் 23592 சிறை கைதிகள் இருப்பதற்கான வசதிகள் உள்ளது. தற்போது 17302 ஆண் கைதிகள் 741 பெண் கைதிகள் உள்ளனர். சிறைச் சாலைகளுக்கு என பல்வேறு பதவிகள் நிரப்பப்பட்டு அதற்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால் மத்திய சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரம் கைதிகளுக்கு ஒரு சமூக சேவகர் பதவி, ஒரு உளவியலாளர், ஒரு நல அலுவலர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. ரூ15000 மட்டும் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

 

சமூக சேவகர் பதவி, உளவியலாளர், நல அலுவலர் நியமிப்பதும் மூலம் கைதிகளின் மனநிலை, கைதிகளின் குடும்பத்துடனான தொடர்பு, மீண்டும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்கான வழிவகைகள் ஆகியவை ஏற்படுத்த முடியும். சிறைக் கைதிகள் பலர் தற்கொலைக்கு முயற்சிப்பது மற்றும் சிறைக்கைதிகளை காவலர்கள் தாக்குவது போன்ற சம்பவங்கள் தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

 

1983ஆம் ஆண்டு மத்திய சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த பள்ளிகளின் விதிகள் 14-ன்படி சமூக சேவகர் பதவி மற்றும் உளவியலாளர் நியமனம் செய்ய வேண்டும் என விதிகள் உள்ளது. இதன்படி, சமூக சேவகர் பதவி, உளவியலாளர் பதவிகளை தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைச்சாலை சீர்திருத்த பள்ளிகள் மற்றும் புதுக்கோட்டை மற்றும் அனைத்து சிறப்பு மகளிர் சிறைச்சாலைகளில் நியமனம் செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு உள்துறை கூடுதல் செயலர் மற்றும் சிறை மற்றும் சீர்திருத்த துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.