ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை.

 


சொத்துவரி பெயர் மாற்றம்

 

மதுரை மாநகராட்சி 6 -வது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரான பரசுராமன். இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை தனது மூத்த மகன் ஈஸ்வர கண்ணனுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதனையடுத்து தனது மகனுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான சொத்து வரி மாற்றம் செய்வதற்காக மதுரை மாநகராட்சி 6 -வது வார்டு கண்ணனேந்தல் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 

 

இதைத் தொடர்ந்து கடந்த 13-ஆம் தேதி விண்ணப்பித்த பின்பாக சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவரான பில் கலெக்டரான ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரும் இடத்தை நேரடியாக கள ஆய்வு செய்துள்ளனர்.

 

இரசாயனம் தடவிய பத்தாயிரம்

 

இதனையடுத்து சொத்து வரி மாற்றம் செய்வதற்காக பரசுராமனிடம் இருந்து பில் கலெக்டர் ஆறுமுகம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணமாக கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மூன்று நாட்களாக லஞ்சம் தொடர்பாக 20ஆயிரம், 15 ஆயிரம் என பேரம் பேசப்பட்ட நிலையில் இறுதியாக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கூறியுள்ளார்.

 

இதையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் பில் கலெக்டர் லஞ்சம் கேட்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பரசுராமனிடம் இரசாயனம் தடவிய பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பிவைத்துள்ளனர்.

 

லஞ்சம் கேட்ட அதிகாரி கைது

 

தொடர்ந்து மாநகராட்சி பிரிவு அலுவலகத்திற்கு சென்ற பரசுராமன் அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய 10ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்த பணத்தினை பெற்றுக்கொண்ட ஆறுமுகம் அவரது உதவியாளர் அற்புதம் (எ) சுதாகரிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது பில் கலெக்டர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து  விசாரணை நடத்திவருகின்றனர்.

 

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் சொத்து வரி மாற்றம் செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக அதிகாரி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.