மதுரை, காமராஜபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி (எ) காளிமுத்துவின் மனைவி திவ்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனது கணவரின் உடன்பிறந்த அண்ணன் சின்னமுனுசு என்பவரை கடந்த 2004 ஆம் வருடம் வி.கே.குருசாமி என்பவரும் அவரது ஆட்களும் சேர்ந்து கொலை செய்தனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு இருதரப்பிலும் பல வழக்குகள் மதுரை மாநகர காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இவற்றில் பல வழக்குகளில் எனது கணவரையும் பொய்யாக சேர்த்து காவல்துறையினர் பதிந்துள்ளனர். இதனால் எனது கணவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றது.இந்நிலையில் 2020ஆம் தென்காசி குற்றாலத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் எனது கணவர் வெள்ளைக்காளியை கைது செய்து அவரது வலதுகால் கணுக்காலை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர்.

 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக திருச்சி சிறையில் எனது கணவர் இருந்து வருகிறார். இவ்வாறான நிலையில் எனது கணவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் மதுரை நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதால் வழக்கின் வாய்தாவிற்கு அடிக்கடி எனது கணவரை திருச்சி மத்திய சிறையிலிருந்து மதுரைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வருகின்றனர்.கடந்த முறை விசாரணைக்காக மதுரை, திருமங்கலம் நீதிமன்றத்திற்கு வரும் பொழுது என்கவுன்டர் மூலம் கொலை செய்தால் வி.கே.குருசாமி ரூ.50,00,000/- வரை தருவதாக திருச்சி பொன்மலை காவல் நிலைய ஆய்வாளர் திருவனந்தம் கூறியுள்ளார். இதனை எனது கணவர் என்னிடம் தெரிவித்தார்.

 

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.எனவே, எனது கணவரை காவல்துறையினர் சட்டவிரோதமாக போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கு குறித்து தமிழக காவல்துறை தலைவர், திருச்சி மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



எம்.சாண்ட்  குவாரிக்கு அனுமதி பெற்று சட்டவிரோத மணல் கடத்தல் -

நிஷாந்த் என்பவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி வழக்கு 

 

நெல்லை மாவட்டம் பொட்டல் கிராமத்தில் எம்.சாண்ட் குவாரிக்கான அனுமதியை வைத்து பல கோடி மதிப்புள்ள ஆற்று மணலை அள்ளியது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த நிஷாத் என்பவர், முன்ஜாமீன் பெற்றார். இதற்காக நெல்லை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி நிஷாத் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், கூலித் தொழிலாளியான தன்னால் ரூ.10 லட்சம் செலுத்துவது சிரமம் என கூறியிருந்தார்.

 

இதனால், நிஷாத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிசிஐடி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது. அதில், கூலித் தொழிலாளி எனக் கூறியுள்ள நிஷாத்திற்கு, கேரளாவில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா உள்ளது. இவரது வங்கி கணக்கில் மட்டும் ரூ.85 லட்சத்திற்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே, இவரது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மனு மீதான விசாரணையை மார்ச் 17க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.