தென்மண்டல ஐ.ஜி.,ஆக பொறுப்பேற்றிருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரி அஸ்ரா கார்க் செய்த சம்பவம், இன்றும், என்றும் மறக்க முடியாத ஒன்று. அதுவரை எந்த போலீஸ் அதிகாரியும் செய்யாத காரியத்தை அவர் செய்தார். 


மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரது கணவர் ஜோதிபாசு என்கிற வீரணன். சம்பவத்தன்று, தனது மகளிடம், தகாத முறையில் நடந்து கொள்ள ஜோதிபாசு முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்ற உஷாராணிக்கும், ஜோதிபாசுவுக்கும் கடும் சண்டை ஏற்படுகிறது. இதில் மகளை பாதுகாக்க , கணவர் ஜோதிபாசுவை கிரிக்கெட் பேட்டால் தாக்கினார் உஷாராணி. அதில் சம்பவ இடத்திலேயே ஜோதிபாசு உயிரிழந்தார். 




ஜோதிபாசு மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்த உறுப்பினர்கள், உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கவும், அவருக்கு வேறு ஒருவர் கொலை செய்ய உதவியதாக மறியலில் ஈடுபட்டனர். விவகாரம், பூதாகரமாக மாறியதால், அன்றைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.பி.,) அஸ்ரா கார்க், நேரடியாக விசாரணையில் இறங்கினார். உஷா ராணி அளித்த வாக்குமூலத்தை உறுதி செய்யும் விதமாக, சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணை, மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை நடத்தினர். அதில், அந்த பெண்ணின் மீது கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது. அதை அவரது தந்தை ஜோதிபாசு தான் ஏற்படுத்தினார் என்பதும் தெரியவந்தது. 


வழக்கமாக இது போன்ற வழக்குகளில், என்ன காரணம் கூறப்பட்டாலும், கொலை குற்றவாளி என்கிற முறையில், கொலையாளி கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கில் அஸ்ரா கார்க், புதிய புரட்சியை செய்தார். இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி, பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள கொலை செய்தால், அது கொலையாகாது என்கிற விதி உள்ளது. அதை பயன்படுத்தினார் அஸ்ரா கார்க். கொலை வழக்கில் இருந்து உஷாராணியை விடுவித்தார் அஸ்ரா கார்க். சம்பவம் நடந்த நாள்... 2012 பிப்ரவரி 12. 


அன்றைய தினம் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அன்றைய மதுரையின் எஸ்.பி.,யான அஸ்ரா கார்க், ‛‛பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமை இது. குற்றத்திற்கான முகாந்திரம் உறுதியாக தெரிந்ததால், இந்த முடிவுக்கு வந்தோம். சட்டத்தின் படி தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்’’ என்று பேட்டியளித்தார்.


அதற்கு பிறகு தான், இப்படி ஒரு சட்டம் இருப்பதும், போலீசாரே கொலையாளியை விடுவிக்கலாம் என்பதும் தெரியவந்தது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன், மதுரையின் எஸ்.பி.,யாக சரியான சம்பவத்தை செய்த அஸ்ராகார்க், அதே மதுரையில் தென்மண்டல ஐ.ஜி.,யாக பொறுப்பேற்க உள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண