கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் சீசனும் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறைக்கு பழ சந்தையில் பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக தொடர்ச்சியாக புகார் வந்துள்ளது.


 

 

இந்நிலையில்  மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஜெயவீரராமபாண்டியன் தலைமையிலான அதிகாரிகள்  ஒவ்வொரு கடைகளாக சென்று  ஆய்வு செய்தனர். அப்போது பழ மார்க்கெட்டில் உள்ள சுமார் 140 கடைகளில் சோதனை செய்ததில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 154 கிலோ மாம்பழங்கள் , 45 கிலோ திராட்சைப் பழம், 60 கிலோ தண்ணீர் பழம், மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 18 தார் (420 கிலோ) வாழைப்பழங்கள் உட்பட சுமார்  28 ஆயிரம்ரூபாய் மதிப்பிலான பழங்களை பறிமுதல் செய்தனர்.

 





 

மேலும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மற்றும் அழுகிய பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. இதுபோன்று மார்க்கெட்டில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை கண்டறியப்பட்ட கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்கவைப்பதற்கான மருந்துகள், உபகரணங்களையும் பறிமுதல் செய்த உணவுப்பாதுகாப்புத்துறையினர் கடை உரிமையாளர்களுக்கு செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.



 

பழ மார்க்கெட் பகுதியில் போன்று சிம்மக்கல் பகுதிகளிலும் , பிரபலமான விற்பனை நிலையங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், உணவுப்பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி பழங்கள் தரமான முறையில் இயற்கையான முறையில் பழுக்கவைத்து விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.