மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர். சரவணனை ஆதரித்து வடமாநிலத்தவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "25 ஆயிரம் வட இந்தியர் குடும்பம் மதுரையில் உள்ளது‌. அவர்களிடம் வாக்கு சேகரித்தோம்‌. அதிமுக ஆட்சியில் தான் வட இந்தியர்கள் நிம்மதியாக தொழில் பண்ணினோம் என்றனர். மத்தியில் மோடி ஜி வந்தாலும் தமிழ் நாட்டில் அதிமுகதான் வர வேண்டும் என்று கூறி ஆதரவு கொடுப்பதாக கூறினார்கள்.

 

மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழர்கள் தனித்துவம் பெற்றதன் அடிப்படையில் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அமித்ஷா எதையாவது பேச வேண்டும் என்று பேசியுள்ளார். திராவிட இயக்கம்தான் ஏழை எளிய மக்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வாங்கும் நிதியில்தான் பிற மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதைக்காட்டிலும் ஊழல் அங்கே நடந்து கொண்டிருக்கிறது. திமுகதான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி. அதிமுக ஆட்சியை யாரும் குற்றம் சொல்லவில்லை.

 

அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது

 

”ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கங்களை பற்றி பேசும் அண்ணாமலையின் மறுபிறவியாக அமித்ஷா பேசுகிறார். தேர்தலுக்காக அமித்ஷா அப்படி சொல்லுகிறார். அவர் எதையோ நினைத்து எதையோ சொல்லி உள்ளார். அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை.  திமுகவை  தான் சொல்லவேண்டும். ஆனால் மாற்றி சொல்லி விட்டார். எங்கள் கட்சி அழிந்து போய் விடும் என்று சொல்வதற்கு அண்ணமலை என்ன விஷ்வாமித்திரரா?

 

அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அதிமுக பீனிக்ஸ் பறவை போன்றது. எத்தனையோ பேரை பார்த்து பல சோதனைகளை கடந்து வந்துள்ளது. அண்ணாமலை கூற்று என்பது வேடிக்கையானது, நகைச்சுவையானது, அவர் நகைச்சுவையாக மாறிவிட்டார்.

 

அண்ணாமலைக்கு தோல்வி பயம். அதனால் இதுபோன்று பேசி பார்க்கிறார்.  இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பேசுவார். அண்ணாமலை ஒன்றும் சூப்பர் ஸ்டார் கிடையாது. எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை எதுவும் பண்ண முடியாது.  இந்த அண்ணாமலை ஜுஜுபி. அண்ணாமலையை கிழிகிழின்னு கிழித்துவிட்டேன்.  "ரோட் ஷோ" என்று பிரதமரை அழைத்து வந்து, அண்ணாமலை பிரதமரின் செல்வாக்கை ஒன்னுமில்லாமல் ஆக்கி விட்டார்” என்றார்.