தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள்

 

இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்கொண்டோம் என்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக (DMK)  மற்றும் அதிமுக (Admk) இரண்டு கட்சிகள்தான் பிரதான கட்சிகளாக இருந்து வருகிறது. இரண்டு கட்சிகள்தான், தொடர்ந்து மாறி, மாறி ஆட்சியும் செய்து வருகிறது. ஆனால் 1972-க்கு முன்பு நிலைமை இப்படி இருந்ததில்லை. திமுகவில் இருந்து பிரிந்து வந்த, எம். ஜி.ஆர்தான் அதிமுக என்ற கட்சியை கட்டமைத்தார். 



அண்ணா - கலைஞர் - எம்ஜிஆர்

 

எம்ஜிஆர், 1953-ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை ஏற்று திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார். எம்ஜிஆர் மற்றும்  திமுக தலைவருமான, கலைஞர் கருணாநிதி இருவரும் ஆரம்ப கட்டத்தில், நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.1960-களில் அண்ணா அவர்கள் உயிரோடு இருந்தபொழுதே, இருவருக்கு இடையே கருத்து மோதல் இருந்ததாக கூறுகின்றனர், அரசியல் வல்லுநர்கள். பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, இந்த மோதல் அதிகரித்துள்ளது.  இருவருக்கு, இடையே சிறு சிறு மோதல்கள், வாக்குவாதங்கள் இருந்தாலும், இருவரும் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்து வந்தனர்.

 

இப்படி ஒரு நாள் வந்து தான் ஆகணும்.. 

 

அரசியலில் இருவருக்கு மோதல் என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தே ஆக வேண்டும் அல்லவா. சமீபத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இருந்த மோதல், ஒற்றைத்தலைமையின் பொழுது உச்சகட்டத்தை அடைந்ததை போல செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கர்ஜித்தார் எம்ஜிஆர். இதுவே அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு, அவர் பேசியதுதான் புயலைக் கிளப்பியது.



அப்படி என்ன பேசினார் எம்ஜிஆர் ?

 

அமைச்சர்கள் , சட்டமன்ற மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை ஏன் திராவிட முன்னேற்ற கழகம் கேட்கக்கூடாது. ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால், அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா அதற்கு முன்னால் வந்ததா என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது,  ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான் , சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு, இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன்.

 


மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் , தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். குடும்பத்தினர் சொத்து வாங்கி இருந்தால், எப்படி வந்தது? என்று விளக்கம் சொல்லவேண்டும்.. பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம் எனக்கூட்டத்தில் பேசியிருந்தார் .

 

அதிரடி நீக்கம்

 

இந்த பேச்சு திமுக தலைவர்கள் இடையே, கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. எனவே, செயற்குழு மூலம் எம்ஜிஆர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,  பொதுக்குழு மூலமாகவும் எம்ஜிஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்து ஒரு வார காலத்திலேயே, அதிமுகவை என்ற கட்சியை துவங்கியிருந்தார். அதிமுக என்ற கட்சி ஆரம்பிப்பதற்கு, திருக்கழுக்குன்றம் கூட்டம் திருப்பு முனையாக அமைந்தது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.





திருக்கழுக்குன்றம் " சென்டிமென்ட் "

 

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு, பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்களால் அரசியலில்  பின்னடைவை  சந்தித்து வருகிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையாக, எடப்பாடி பழனிச்சாமி உருவெடுத்துள்ளார். இந்தநிலையில், இன்று மதுரையில் அதிமுக சார்பில், பல லட்சத் தொண்டர்கள் கலந்து கொள்ளும் ' மாநில மாநாடு ' நடைபெற உள்ளது. மாநாட்டில், எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய கொடி கம்பத்தில், அதிமுகவின் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாநாட்டில் ஏற்றப்பட உள்ள கொடிக்கம்பம் மற்றும் அதற்கான அதிமுக கொடியும்,  திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மூலம் , 5 கொடிகள் மதுரை மாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கக் காரணமான, திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து அதிமுக கொடி சென்றிருப்பது, அதிமுகவினருக்கு 'சென்டிமெண்டாக' உற்சாகம் தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் நிர்வாகிகள் சிலர்.