தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நுழைவுகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக தான் நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி தான் அரசியலுக்கு வருவதையும் வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்பேத்கருடைய பிறந்த நாளன்று தமிழகம் முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சென்று அம்பேத்கருடைய சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.



 

இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த நடவடிக்கை என்பது நடிகர் விஜய் அரசியல் ரீதியான நுழைவை அறிவிக்கும் வகையிலாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வை தொடர்ந்தாக நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் பல்வேறு கட்டமாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழக முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் உடைய விவரங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து தரவும் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் தான் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 2024 பாராளுமன்றமே 2028ன் சட்டமன்றமே என்ற வாசகங்களுடன் விரைவில் மதுரையில் மாநாடு என்று மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மூலமாக நடிகர் விஜய் மதுரையில் மாநாடு நடத்தக்கூடியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நடிகர் விஜய் போட்டியிடுகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனித்து களம் காண்கின்றனரா?  இல்லையெனில் ஏதேனும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனரா?  என்று கேள்வியும் எழுந்துள்ளது. சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நடிகர் விஜய் திடீரென அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளது அரசியல் ஆர்வலர்களிடையே  பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.