மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் சங்க அரங்கில் பா.ஜ.க., மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசியவர், "தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமாவளவன், சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அரசு அனுமதிக்கக் கூடாது. 1991 விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பி.எப்.ஐ.,உடன் வி.சி.க., இருக்கும் என திருமா பேசியுள்ளார். பயங்கரவாதிகள் கைக்கூலி திருமாவளவன். அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எதிரிகள் திருமாவளவனும், சீமானும் தேச துரோகிகள். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் நல்லவர். அவருக்கு சுற்றி இருப்பவர் கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991-ல் நடந்தது இப்போது நடக்கும்.




 

திராவிட மாடல் ஆட்சி மானக்கேடான ஒன்று. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பால் பாக்கெட்டில் 'இது ஹலால் செய்யப்பட்டது' என குறிப்பிட பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திமுக - திமிர் பிடித்தவர்கள் கட்சி. மந்திரிகள் அராஜக போக்கோடு செயல்படுகிறார்கள். தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அமைதியாக தான் நடந்தது. டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். அவர் டிஜிபியாக இருக்க அருகதை இல்லை.



 

ராஜராஜ சோழன் சிவ பக்தன் எனவே அவர் இந்து தான்.  இந்து என்பது மதம் அல்ல, அது நாடு. 

அரசமைப்பு இந்துவை இந்துக்கள் அல்லாதோர் என வகைப்படுத்தி உள்ளது. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் இந்து மதங்கள் தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில் அதை ஆறாக ஒருங்கிணைத்தார்.  சிவம் வேற இந்து வேற இல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல. எனவே ராஜராஜன் இந்து தான். அரசமைப்பு படியும் ராஜராஜன் இந்து தான். இந்து மதத்திற்கு துவக்கமே கிடையாது. அது அநாதி மதம்.  மாமன்னன் ராஜராஜ சோழன் 100% இந்து மன்னன் தான். அரசியலில் கூட்டணி என்பது தற்காலிகமானது. பாஜகவுக்கு எதிராக மம்தா - ஸ்டாலின் உள்ளிட்டோரால் அமைக்கப்படும் கூட்டணியால் பலனில்லை.  பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. அதை திருடி எடுத்து திமுக அரசு செயல்படுத்தி உள்ளது" என கூறினார்.