கண்பார்வை குறைபாடு கொண்ட இளம் பெண் சரண்யா வீட்டுக்கு நேரடியாக சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்,  இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.03.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணையினையும் வழங்கினார்.

 

'சுற்றுச் சுவர் இல்லாத ஆஸ்பெட்டாஸ் வீடு, படிச்ச சான்றிதழ்களை பாதுகாப்பாக வைக்க சன்னல் கூட வீட்டில் இல்லை என்ற வறுமையான நிலையில் அம்மாவின் ஆதரவில் வாழும் பார்வை சவால் கொண்ட பட்டதாரி, இளம்பெண் தான் சரண்யா. பார்வை இல்லை என்றால் என்ன? கல்வி தான் கண்ணென மதுரை மீனாட்சி அரசுக் கலைக்  கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். அப்பா நோயுற்று இறந்த சூழலில் அம்மாவின் அரவணைப்பில் இருக்கிறார். படிப்பு மட்டும் போதாது என்று விளையாட்டிலும் திறமையை வளர்த்துள்ளார். சொந்த ஊரில் சுவர்கள் கூட இல்லாத ஆஸ்பெட்டாஸ் வீட்டில் தாயும் மகளும் கால் முடக்கி எந்திருக்கின்றனர். இவர்கள் கஷ்டப்படும் காட்சியை படம் பிடிக்கும் போதே கண்ணில் லேசா கண்ணீர் வரவைத்துவிட்டது. இருக்க சிறிய வீடும், அன்றாடம் வாழ்க்கை நடத்த வேலையும் தான் இவரின் தேவை. திறமைக்கு ஏற்ற வேலை கிடைத்தால் போதும் தனக்காக வாழும் தாயை, தானே வாழ வைத்துக் கொள்வேன் என நம்பிக்கை கொள்கிறார் சரண்யா.

விளையாட்டிலும் கெட்டி


சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யூனியனுக்குட்பட்ட கீழநெட்டூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி -  ராஜேஸ்வரி தம்பதியின் மகள் சரண்யா வயது 24. இவருக்கு சிறுவயதில் இருந்து கண் பார்வை குறைவாக இருந்துள்ளது. சிறிது நாட்கள் மட்டும் சிறிது பார்வையோடு வாழ்ந்து வந்த சரண்யா, காலப்போக்கில் முழுமையாக கண்பார்வை இழந்துவிட்டார். தந்தை உடல்நல குறைவால் உயிர் இழக்கவே குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு தனது தாயாருடன், மேலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்துவந்துள்ளார். நண்பர்கள், தன்னார்வலர்கள்  மற்றும் ஆசிரியரின் உதவியோடு மதுரையில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்து முடித்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டியிலும் திறமை வாய்ந்தவராக திகழ்ந்து  மாவட்ட அளவில் மட்டுமில்லாமல், மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்றுள்ளார். 

 


மாணவியின் கோரிக்கை இது தான்


இந்நிலையில் தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி  வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதாகவும், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிய சூழலும், அந்த வீட்டை கூட சரிவர கட்ட வழியின்றி தவித்து வருவதாகவும், கண் பார்வையற்ற நிலையில் படித்து இருந்தும் வேலை வாய்பற்ற நிலையில் இருப்பதாகவும், தாங்கள் வாழ்வதற்கு கழிப்பறையுடன் கூடிய ஓர் வீடும், தனக்கு வேலைவாய்ப்பினை தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும், சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் ஏற்படுத்தி தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

 

இந்த சூழலில் இது குறித்து நமது ஏபிபி நாடு தளத்தில் ” ”முடக்கி எந்திரிக்க வீடும், வேலையும் கிடைச்சால் போதும்” - பார்வை சவால் கொண்ட மாணவியின் கோரிக்கை !என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம். கண்பார்வை குறைபாடு கொண்ட இளம் பெண் சரண்யா வீட்டுக்கு நேரடியாக சென்ற சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்,  இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.03.50 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லத்திற்கான ஆணையினையும் வழங்கினார். இதனை தொடர்ந்து இளம் சரண்யா மன மகிழ்ச்சியடைந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.