கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களுக்கு பிறகு கொரோனா வைரஸ்சின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்னிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்ற மாதம்  ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு இலக்கமாக இருந்து மாத இறுதியில் இரண்டு இலக்கமாக மாறியது. அக்டோபர் மாதம் தொடங்கி ஒரு வாரம் நிறைவந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 



கொரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும்  இதுவரை மாவட்டந்தோறும் 4 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி மற்றும் 18 ஊராட்சிகளில் 100 சதவீத தடுப்பூசி இலக்கு எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது, 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நகராட்சி, எரியோடு பேரூராட்சி, திருக்கூா்ணம், தோளிப்பட்டி, குத்திலுப்பை, வலையப்பட்டி, காமனூா், கே.சி.பட்டி, பெரியூா், பாச்சலூா், கும்பரையூா், பூலத்தூா், தாண்டிக்குடி, அடுக்கம், பூண்டி, அக்கரைப்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, சிங்காரக்கோட்டை, வேலாயுதம்பாளையம், அம்மாபட்டி ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.




எனவும் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கை அடைவதற்காக 898 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல் சுகாதாரம் மாவட்டம் மற்றும் பழனி சுகாதார மாவட்டங்கள் இரண்டும் சேர்ந்து  முதல் தவணை தடுப்பூசி 11,27,069 பேருக்கும்,  இரண்டாம் தவணை தடுப்பூசி 3,10,871 பேருக்கும் ஆக மொத்தம் 14,37,940 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது சதவிகித அடிப்படையில் 69% ஆகும் என தெரிவித்துள்ளார். 


Gold-Silver Price, 07 October: பெட்ரோல் டீசலோடு போட்டி போடும் தங்கம், வெள்ளி!