குடிசை வீடு கூட சற்று செழிப்பாக இருக்கும், ஆனால் அவர் தங்கிருந்த ஓட்டு வீடு அப்படி இல்லை. கிரானைட் குவாரி 'கல்' நடு வீட்டுக்குள் விழுந்தது போல் வீடே அலண்டு போய் இருந்தது. பழைய டீவி, டி.வி.டி பிளேயர், என ஏராளமான பழுதான எலெக்ட்ரானிக் ஜாமான், துருபிடித்த கட்டில் என ஒரு ஈரவாசனை அடிக்கும் வீடாக தான் இருந்தது. ஆனால் அது தான் தன் நாய் வளர்ப்பிற்கு நல்லது என்கிறார், வெங்கடேஷன்.


சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார் வெங்கடேஷன். எலெக்ட்ரீசியன் பணி செய்வரும் இவர் ஒரு நாய் விரும்பி. தெருவில் கிடக்கும் நாய், அடிபட்டு கிடக்கும் நாய் என ஆதரவற்ற நாய்களுக்கு அச்சாரமாக இருந்து வருகிறார். இல்லற வாழ்க்கையை துறந்த இவருக்கு நாய் குட்டிகள் மட்டும் தான் சொந்தம். வறுமையில் வாழ்ந்தாலும் நாய்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அடேய் கழுத என்று நாய்களை செல்லமாக திட்டிக் கொண்டிருந்த வெங்கடேஷனை அவரின் வீட்டில் சந்தித்தோம். ' அண்ணணுக்கு வணக்கம் சொல்லு..., சொல்லுடா' என்று நாய் குட்டிகளை கெஞ்சிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.




“எனக்கு சின்ன வயசுல இருந்து நாய் குட்டிகனா அவ்ளோ பிரியம். எந்த நாயை கண்டாலும் பரிதாபப்படுவேன். இந்த சூழலில் குடும்ப வாழ்க்கையில் பிரிந்த நான் நாய்குட்டிகளை வளர்த்து வருகிறேன். எனக்கு சொந்த ஊர் மதுரை என்றாலும் பிழைக்க வந்த, சிவகங்கையில் தான் காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன். அடிபட்டுக் கிடக்கும் நாய்கள் எங்க கண்டாலும் அதுகளுக்கு மருந்து போட்டுக் காப்பாத்திபுடுவேன். இப்படி நேசமாகுற சில நாய் என் கூட ஒட்டிக்கிடும்.  இப்ப மட்டும் என் வீட்டுல 15 நாய் வளக்குறேன். எதுவும் நான் காசு கொடுத்து வாங்குனது இல்ல. என்ன பிடிச்சு போய் என் கூடவே வந்த நாய்கள். இது வரைக்கும் நான் நூற்றுக்கணக்கான நாய்கள போர போக்கில் சந்தித்து உதவி இருக்கேன். அதில் கிட்டதட்ட 40 நாய்களுக்கு மேல் என்னோட கவனிப்பில் வச்சிருந்தே. வயது மூப்பு காரணமாக அப்ப, அப்ப நாய் குட்டிகள் இறந்திரும் புதுசா வரும் நாய் குட்டிகள தொடர்ச்சியா எடுத்து வளத்துப்புடுவேன். நான் டீ குடிக்கிறனோ இல்லையோ என் செல்லங்களுக்கு பாலும், முட்டையும் வாங்கிக் கொடுத்து பசி ஆத்திவிடுவேன். நான் எலெக்டீரிசன் வேலை செய்வதால காசு கிடைக்கும் அத வச்சு தான் நாய் குட்டிகள பார்த்துகிறேன்.




நாய்களின் நேசர் தங்கசாமி ஐயா குறித்த காணொலி பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - கருப்பிகளின் காதலன்.. தங்கசாமி எனும் தெய்வப்பிறவி | Dog Story | Save Dogs | Sivagangai | Madurai


சொரி வந்தது, புண்ணு வந்தது, என எந்த நாய கண்டாலும் விட மாட்டேன் தூக்கிட்டு போய் காப்பாத்திவிடுவேன். சில நாய்களுக்கு டாக்டர் மூலம் ஆப்ரேஷன்லாம் செஞ்சு காப்பாத்திருவேன். எனக்கும் இப்ப கொஞ்சம், கொஞ்சம் வைத்தியம் தெரியும் அதனால சின்ன சின்ன நோய்க்கு நானே மருந்து வாங்கிக் கொடுத்து நாய்கள காப்பாத்தி விட்டுருவேன். நாய் வளர்ப்பதால அக்கம், பக்கத்தில் கூட சண்டை போட்டு தான் வளக்குகிறேன். நான் இருக்கும் வீடு கொஞ்சம் டேமேஜா இருக்கும். ஆனாலும் பெருசா வீடு ஒழுகாது. இப்படி இருக்கதால தான் இந்த நாய்கள இந்த வீட்டுல வளக்க முடியுது. சொகுசான வீடு பார்த்தா வீட்டு ஓனர் இந்த நாய்கள வளக்க விடமாட்டாங்க"  என்கிறார் முகம் மலர்ந்து வெகுளியாக.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !