மதுரை அய்யர்பங்களா அருகே பாமாநகர் பகுதியை சேர்ந்த சரவணன் சிதம்பரம் - தம்பதியினர் மகளான ஓவியா ஆனந்தி மதுரையில் சோழவந்தான் பகுதியில் உள்ள கல்வி இன்ஸ்டியூட் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். பெஸ்ட் டிப்ளோமெட்ஸ் என்ற அமைப்பின் மூலமாக மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கருத்தரங்கத்தில் அமெரிக்கா, ரஷ்யா ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இந்தோனியா, சவுத் ஆப்ரிக்கா உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த 120 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.


இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பேராசியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்ட 120பேர் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் முதன்முறையாக 17 வயது நிரம்பிய 12ஆம் வகுப்பு மாணவி ஓவியா ஆனந்தி பங்கேற்றார். 


 






இந்த கருத்தரங்கில் தீர்மானம், விவாதம், கேள்வி பதில், பேச்சு என தனிதனி பிரிவுகளில் நடைபெற்ற இரு நாட்கள் கருத்தரங்கில் பங்கேற்று பேசினார் மாணவி ஓவியா ஆனந்தி. நியூக்ளியர் போரை தடுப்பது குறித்த கருத்தை பதிவிட்டு சிறப்பாக உரை நிகழ்த்தினார். மேலும் ஐஸ்லாந்து நாடு குறித்தும் அந்நாட்டின் குடிமகளாக இருந்து பேசுவது போன்று அந்நாட்டின் எதிர்காலம் குறித்தும், நாட்டின் தலைமை குறித்தும் மாணவி ஓவியா பேசினார். அவரது பேச்சுதிறன், சிந்தனையுடன் பேசி பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆழமான சிந்தனை மிக்கப் பேச்சாற்றலால் அங்கு  கலந்துகொண்ட பல நாட்டு  அறிஞர்கள் அனைவராலும் பாராட்டப்பெற்று ஐக்கிய நாட்டு அரங்கில் உள்ள அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்கவைத்தார்.




இதனையடுத்து இந்த கருத்தரங்கில் 3 சிறந்த கருத்தாற்றல் மிக்கவர்களை தேர்வு செய்து அதில் முதல்  "சிறந்த கருத்தாற்றல் மிக்கவர்" என்ற விருதினைப் பெற்றவர் மாணவி ஓவியா ஆனந்தி இந்தியாவிலிருந்து 17 வயது மாணவி இவ்விருதினைப் பெற்று பாராட்டப் பெற்றது இதுவே முதல் முறையாகும். இதேபோன்று இதுவரை யாரும் வாங்கியது இல்லை, சர்வதேச அளவில் 17வயதில் இந்த விருதினையும் பாராட்டையும் பெற்றவர் மாணவி ஓவியா ஆனந்தி என்பவர் குறிப்பிடதக்கது. இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது தந்தை மற்றும் பள்ளி சேர்மன் செந்தில்குமார் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். பள்ளி மாணவியின் உலகளாவிய சாதனையை பாராட்டி ஆட்சியர் வாழ்த்துதெரிவித்தார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணவி ஓவியா ஆனந்தி..’சர்வதேச அளவிலான கருத்தரங்கில் இந்தியா சார்பில் பங்கேற்று விருது மற்றும் பாராட்டை பெற்றது ஈடில்லா மகிழ்ச்சி அளித்தது, முதன்முறையாக 12ஆம் வகுப்பு மாணவியாக அந்த அரங்கில் கலந்துகொண்டு விருது பெற்றுள்ளேன். இந்த கருத்தரங்கில் ஐஸ்லாந்து நாடு குறித்து பேசினேன்.


அவர்களது நாட்டில் இளைஞர்களுக்கான வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தேன் எனவும், நான் விருதுபெற்றவுடன் அனைத்து நாட்டவர்களும் பாராட்டினர். குறிப்பாக பாகிஸ்தானியர்கள் நமது இந்திய நாட்டை மிகவும் நேசிப்பதும், அவர்கள் இந்தியாவுடன் நட்புறவையும், அமைதியையும் விரும்புகின்றனர் என்பது தெரியவந்தது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி பள்ளியின் சேர்மன்..,'எங்களது பள்ளி மாணவி இந்தியா சார்பில் பங்கேற்று முதன்முறையாக சர்வதேச அளவில் முதல் மாணவியாக பங்கேற்று விருதினை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.