சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி இறந்த சூழலில் தங்களது இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், பிளஸ்-1 படிக்கும் தனது இரண்டாவது மகளை மிகவும் கஷ்டமான சூழலில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த அந்த மாணவியை, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31) ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. மாணவி தனது வீட்டில் இருந்த 3 ஆயிரம் பணத்தையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 




இதனால், மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடியலைந்து பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பான புகாரை காவல்துறையினர் தீவிரம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு 11 மணிக்கு பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த மாணவியை தந்தையே மீட்டுள்ளார். இதையடுத்து தேவகோட்டை மகளிர் காவல்துறையினர் மாணவியை அழைத்துச் சென்ற கார்த்திகை கைது செய்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்காத சூழலில் உயர் அதிகாரிகள் அழுத்ததால் கடந்த 10-ம் தேதி  குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மாணவி ஆஜர் படுத்தப்பட்டார்.


மாணவி அளித்த வாக்கு மூலத்தில் கார்த்திக் பகல் முழுவதும் பேருந்து நிலையத்தில் பசியுடன் காக்க வைத்துவிட்டு இரவில் உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் தனது நண்பர்களையும் குற்றத்தில் ஈடுபடவைத்தது தெரியவந்துள்ளது. கார்த்திக்கின் நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து பகலில் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.




இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட கோபால்பட்டினம் முகமது செரிப் (22), அங்காளகோட்டை விஜய் (23), மற்றும் வாரியன் வயலை சேர்ந்த சிறுவன் உள்ளிட்டோரை சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் முகமது செரிப், விஜயையும்  சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி சிறுவனை இளஞ்சிறார் நீதிபதி முன் ஆஜர்படுத்த அறிவுறுத்தினர். மேலும் மாணவியின் அலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியிடம் தவறாக பேசிய நபர்களையும் கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக மாணவி மற்றும் கைதான நபர்களின் செல்போன்களை சென்னை தடவியல் ஆய்வக பரிசோதனை செய்ய அனுப்பியுள்ளனர்.


பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உட்பட 4 நபர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மத்திய பட்ஜெட்டை திருத்தி அமைக்க வேண்டும்' - மதுரையில் ப.சிதம்பரம் பேச்சு !