உசிலம்பட்டி அருகே தனது குட்டியுடன் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தொட்டப்ப நாயக்கணூரில் கன்னிமார் கோவில் அருகே முருகேசன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இப்பகுதியில் தான் மேற்குத் தொடர் மலை உள்ளதால் வனவிலங்களின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வருகிறது. மலைப்பாம்பு, மான், முயல் உள்ளிட்டவை அவ்வப்போது வந்து செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.



முருகேசன் தோப்பில் உள்ள நாவல் மரத்தில் பழங்கள் சாப்பிட கரடி ஒன்று குட்டியுடன் வந்துள்ளது. இந்நிலையில் தவறுதலாக கரடி தன் குட்டியுடன் சுமார் 30 அடி கிணற்றில் விழுந்தது. இன்று காலை முதல் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கரடியை மீட்க போராடி வந்தனர். ஆனால் கரடி மற்றும் அதன் குட்டியை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நாளை காலை கரடியை மீட்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இதனை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "சுமார் 12 மணி போராட்டத்தின் போதும் கரடியை மீட்க முடியவில்லை. நாளை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறும். மயக்க ஊசி உள்ளிட்ட நவீன வசதிகள் கோவை சுற்றுவட்டார பகுதியில் மட்டுமே உள்ளதால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை. எனினும் ஏணி, மரக்கிளை உள்ளிட்டவைகளை வைத்து முயற்சி செய்தோம் அவையும் தோல்வியில்தான் முடிந்தது. கிணற்றுக்குள் கூண்டு ஒன்றை இறக்கி பழங்களை வைத்தோம். ஆனாலும் கரடியும், அதன் குட்டியும் அதற்குள் செல்லவில்லை.




இரவு கரடியும் அதன் குட்டியும் வெளியேறும் வகையில் ஏணி மற்றும் மரக்கிளைகளை வைத்துள்ளோம். அதன் மூலம் வெளியேறும் என நம்புகிறோம். இல்லையெனில் சிறப்புப்படை மூலம் கரடியையும், கரடியின் குட்டியையும் காப்பாற்றி வெளியே கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவோம். தற்போது இரவு நேரத்தில் சுழற்சி முறையில் 5 வனத்துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரடிக்கும், இப்பகுதி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் செயல்படுகிறோம்" என்றனர்.