தூத்துக்குடி-நெல்லை செல்லும் வல்லநாடு பாலம் கட்டியதில்   முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் கருத்து.பணிகள் எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது குறித்து முழுமையான அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்   மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை - தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை இடையில் தாமிரபரணி ஆறு கடக்கிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே இரண்டு தடத்திலும் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த 2012ல் திறக்கப்பட்டது. 100 ஆண்டுகள் உத்தரவாதம் அளித்த நிலையில் 2017ல் நெல்லை - தூத்துக்குடி செல்லும் பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது. பாலம் பலமிழந்துள்ளதால் எந்தநேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி-நெல்லை செல்லும் பாலத்தில் ஓட்டை விழுந்தன. பாலம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளது. தரமற்ற பொருட்களைக் கொண்டு பாலங்களை கட்டியுள்ளனர். 

 

எனவே, பலமிழந்துள்ள பாலங்களை அகற்றிவிட்டு, தரமான புதிய பாலங்கள் கட்டவும், சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இதே பகுதியில் மதுரை-நாகர்கோவில் செல்லும் பகுதியில் முறையான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்ற மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் முன்பு  விசாரணைக்கு வந்தது.அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தரப்பில், தற்காலிகமாக பாலத்தின் வலது பக்கம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.மேலும் எந்த மாதிரியான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆய்வு பரிந்துரைப்படி ரூ.21.427 கோடியில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் பரிந்துரையை டில்லி என்.எச்.ஏ.ஐ தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் அளித்து 90 நாளில் பணிகள் முடிக்கப்படும். என தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது நீதிபதிகள், பணிகள் எவ்வாறு நடைபெற உள்ளது என்பது குறித்த தகவல் முக்கியம் இல்லை, பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதுதான் முக்கியம் என கருத்து தெரிவித்து. போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறை கருத்தில் கொண்டு டில்லி என்.எச்.ஏ.ஐ தலைவர் முன்னுரிமை அளித்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும், பாலம் பணி எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது குறித்து என்.எச்.ஏ.ஐ அறிக்கையளிக்கவும், 90 நாட்களில் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க உத்தரவிட நேரிடும் என கூறி வழக்கு விசாரணயைை டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.