மதுரை அருகே நடைபெற்ற பைக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். அவர் காரானது திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வந்தபோது சாலையில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் பைக் ஒன்று கடந்து சென்றுள்ளது.


இதனை தூரத்தில் வந்துக் கொண்டிருந்த கனகவேல் பார்த்து காரின் வேகத்தை குறைக்க முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்றுக் கொண்டிருந்த  நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி பைக் மீது மோதி சாலையில் நடுவில் இருக்கும் சுவரில் இடித்து சாலையின் மறுபுறம் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார்.






காரில் வந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, உறவினர் நாகஜோதி மற்றும் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


முன்னதாக நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதில்  3 மாத குழந்தையும் அடங்கும். இந்த விபத்து சம்பவம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.