மதுரையில் அய்யர் பங்களா, கண்ணேந்தல், திருப்பாலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், அப்பகுதியில் திருப்பாலை காவல்துறை சார்பு ஆய்வாளர் சண்முகநாதன் ரோந்து சோதனையில் ஈடுபட்ட போது, அங்கு சாலையை மறித்து இருசக்கர வாகனத்தில் பேசிக்கொண்டிருந்த நபர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் காவல் சார்பு ஆய்வாளர் கூறியும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் இளைஞர் முத்துக்குமார் தான் சட்டக்கல்லூரி மாணவர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு கையில் வைத்திருந்த பைக் சாவியால் சார்பு ஆய்வாளரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை காவல்துறையினர் இளைஞர் முத்துக்குமாரை கைது  செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



 

இதே போல் மதுரையில் போலீஸ் என கூறி 5 லட்சம் ரூபாயை நூதன முறையில் வழிப்பறி 6 பேர் தலைமறைவு

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், இவர் மதுரை சேர்ந்த சாமிநாதன் என்பவர் வீடு கட்டுவதற்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார், அதற்காக கடன் கொடுப்பதற்கு சுமார் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே காரில் காத்திருந்த போது அங்கு போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் இவரிடம் இருந்து பணத்தை பணத்தைப் பறித்து கொண்டு காவல் நிலையத்தில் வந்து எழுதிக் கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லும்படி கூறிவிட்டு சென்றுள்ளனர்.




 

பரமசிவம் தல்லாகுளம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  போலியான நபர்கள் காவலர் பெயரை பயன்படுத்தி ஐந்து லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு 5 லட்ச ரூபாயை பட்டப்பகலில் வழிப்பறி செய்த 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


 


 

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் ரோந்து பணிகளை போலிசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.