தேனியில் 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு

’இந்த கல் வட்டங்கள் ஆநிரை கவரும் ஆகோள் பூசல் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கலாம்'.

Continues below advertisement

தேனி மாவட்டம் கம்பம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் தொல்லியல் ஆர்வலர்கள் வழக்கறிஞர் பாலதண்டாயுதம், ஜெயமுருகன், சிவராமன் உள்ளிட்டோர் ஏகலூத்துப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு புளியந்தோப்பில் அருகருகே ஒரே தொடர் வரிசையில் கிழக்கு மேற்காக மூன்று கல் வட்டங்கள் இரண்டு சிதலமடைந்த நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். கரடுமுரடான ஒழுங்கற்ற கற்களால் அமைக்கப்பட்ட கல்வட்டங்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 30 அடி வரை விட்டம் கொண்டவையாக இருந்தது தெரியவந்தது.

Continues below advertisement

கீழ் பக்கம் உள்ள கல்வட்டத்தில் குத்துக்கல்லோ கற்பதுக்கையோ  இல்லாமல் கல்வட்டம் மட்டும் இருந்தது. நடுவிலுள்ள  கல்வட்டம் குத்துக்கல்லுடன் கூடியது. இதில் தரைக்கு மேல் ஏறத்தாழ மூன்றரை அடி உயரம் மூன்றரை  அடி அகலத்தில் ஒழுங்கற்ற இயற்கையான குத்துக்கள் ஊண்டப்படிருந்தது. தரை மண் மேட்டில் காணப்படுவதால் இதன் உயரம் தரைக்குள் அதிகமாக புதைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த கல்லின் மேற்புறம் உள்ள கல் வட்டத்தின் நடுவில் கற்பதுக்கை சிதைந்த வடிவத்தில் உள்ளது. 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் மோகன்குமாரமங்கலம் கூறுகையில், "இந்த கல்லானது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்குடி மக்கள் இறந்த குழு தலைவர்களை தாழி அல்லது படுக்கையில் வைத்து அடக்கம் செய்து அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒழுங்கற்ற கற்களை வட்டமாக அடுக்கி கல்வட்டம் உருவாக்கி இறந்தவரின் நினைவாக அமைப்பது வழக்கம். நினைவுச்சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைந்துள்ளதால் காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது.  இந்த நினைவுச் சின்னங்களை அவர்களின் குழுவும் வம்சாவளியினரும் வணங்கி வந்துள்ளனர்.

இதை மூன்றும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட அல்லது வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்டவை என்று தெரியாத நிலை உள்ளது. இந்தக் கல் வட்டங்கள் ஆநிரை கவரும் ஆகோள் பூசல் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கலாம். அமைக்கப்பட்ட கல்வட்டம் குழுத்தலைவர் கூறியதாக இருக்கலாம். இக்கல்வெட்டில் உள்ள குத்துகல்லில் தற்போது வெள்ளை மற்றும் காவி வண்ணத்தில் நாமம் வரையப்பட்டுள்ளது. இக்குத்துக்கல் கன்னிமார் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகிறது.  

அப்பகுதியில் உள்ள நிலங்களை காவல் செய்யும் பரவு காவலர்களால் ஆண்டுக்கு ஒருமுறை தைப்பொங்கல் நாளில் பொங்கல் வைத்து வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் மேலும் பல கட்டங்கள் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. தேனி மாவட்டத்தில் அருகருகே மூன்று கட்டங்களும் கருவிகளும் ஒரே இடத்தில் இருப்பது அரிதாக உள்ளது எனவும் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் இருக்கும் இப்பகுதியில் மக்கள் குடியிருக்கும் வாழிடம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக  ஊற்றுகள் உள்ள பகுதிகளில் புதிய கற்கால வாழிடங்கள் இருப்பது பரவலாக கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே எங்கள் குழுவால் கன்னிமார் கோவில் பகுதியில் புதிய கற்கால கோடாரியும் கொங்கச்சிபாறை பகுதியில் புதிய கற்கால குழவியும் கண்டறியப்பட்டுள்ளது. சேர நாட்டுக்கு மலையடிவாரத்தில் ஓரமாக பழமையான பெருவழி சென்று இருக்கலாம் என்பதை இக்கண்டுபிடிப்பு வலுப்படுத்துகிறது. இவ்வழி கம்பம், உத்தமபுரம், ஏகலூத்து கன்னிமார் ஊத்து, கொங்கச்சி பாறை, பெருமாள் கோவில், உள்ளுமனை, சுரங்கனாறு, கழுதை மேடு இந்தப் பகுதி வழியாக சென்று இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்கிறார் தொல்லியல் ஆய்வாளர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola