மதுரை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினை தொடங்கிவைத்தார். 2 லட்சத்து 64ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்.


போலியோ சொட்டு மருந்து முகாம்


போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1705 இடங்களில் 2லட்சத்தி 64ஆயிரத்தி 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இதேபோல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் பேருந்துநிலையபகுதியில் நடைபெற்ற முகாமினை மேயர் இந்திராணி , ஆணையாளர் தினேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தார். மாவட்ட முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து  முகாமில் பிறந்தது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல் பகுதிகள், நரிக்குறவர் குடியிருப்புகள், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.




 

இந்த சொட்டு மருந்து மையங்கள்  அரசு மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் இடங்களில் காலை  தொடங்கி மாலை 5மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமிற்காக கூடுதலாக நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இதைத் தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 17 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்துவருகின்றனர். இந்தப் பணியில் சுகாதாரத் துறை மூலமாக 1037 பணியாளர்கள், சத்துணவுத் துறை மூலமாக 2545 பணியாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக 42 பணியாளர்கள் உட்பட 6154 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு 04.03.2024 மற்றும் 05.03.2024 ஆகிய இரு தினங்களில் வீடுதோறும் சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.