படியில் தொங்கும் மாணவர்களின் செயல்களால் ஏற்படும் விபத்தினை தவிர்க்க, போக்குவரத்துக் கழகத்தின் சிறப்பு நடவடிக்கையினை அனைவரும் வரவேற்கின்றனர்.

 

படிக்கட்டில் பயணம்

 

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்று முன்னேறும் வகையில் அவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை அளித்து, நகரத்திலும் சென்று கல்வி கற்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இந்தநிலையை சற்றும் உணராமல் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும், சில சமயம் உயிரிழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அனைத்து தரப்பு மக்களையும் வருந்த செய்கிறது.

 


பேருந்துகளில் தகரம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது


 

அவ்வப்பொழுது வெளியாகும் வீடியோக்கள்

 

மாணவர்கள் படியில் தொங்கி செல்லும் வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்கள் படியில் தொங்கி செல்வதால் அவ்வப்பொழுது பொதுமக்கள் மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவதும் அதேபோல நடத்துனர், ஓட்டுனர், மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்படுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



 

புதிய யோசனை

 

இந்நிலையில் இது போன்ற பயண நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் இரு பகுதிகளிலும் தகரம் கொண்டு அடைத்து இச்செயலில் ஈடுபடாத வண்ணம், பரிசோதனை ஓட்டம் சில பேருந்துகளில்  நடைபெற்றது. இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்ததால் காஞ்சிபுரம் பணிமணியின் கீழ் செயல்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் இதுபோன்ற தகரம் பொருத்தும் பணியில் தொழிற்பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



 

 


பேருந்துகளில் தகரம் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது


 

 

திட்டம் எந்த அளவிற்கு கை கொடுக்கிறது

 

படியில் ஏறி உள்ளே செல்லும் வகையில் மட்டுமே இனி இருக்கும் என்பதால், விபத்துக்கள் குறையும் என்பதும், இதன் பிறகு மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை அறிந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. பொதுவாக நகரப் பேருந்துகளில்தான் அதிக அளவு மாணவர்கள் வந்து செல்கிறார்கள். எனவே இந்த திட்டம் எந்த அளவிற்கு கை கொடுக்கிறது, என்பதை பொறுத்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.